ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்குக... வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஏழாண்டு காலம் தான் செல்லும் என்று அரசு கூறி இருப்பது முறையற்றது என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சேவா பாரதி எனும் மதவாத அமைப்பினரை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பிரிவாக செயல்பட அனுமதிப்பதா? சீமான் கேள்வி
7 ஆண்டுகள்
2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதித் தேர்வு சான்றிதழும் வழங்கப்பட்டது. தகுதித் தேர்வின் சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என அரசு அறிவித்தது. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இன்று வரை சுமார் 80,000 க்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
நிரந்தர தீர்வு இல்லை
2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வின் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகும் சூழலை எட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் அவர்களுடைய தகுதித் தேர்வு சான்றிதழ் காலாவதியாக இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. அவர்களுடைய நிலையை தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரிடம் நேரில் சந்தித்தும்,மனுவாகவும், முறையிட்டும் அவர்களுக்கான நிரந்தர தீர்வு இன்று வரை கிடைக்கப்பெறாதது மிகவும் கண்டனத்துக்கு உரியது.
அதிர்ச்சி
2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கடந்த ஆறரை ஆண்டுகளாக பணி கிடைக்காததால் மன உளைச்சலால் இதுவரை மூன்று தேர்வர்கள் இறந்துள்ள செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி ஓய்வு பெறுகிறார்கள், இலட்சக்கணக்கான மாணவர்கள் புதியதாக அரசுப்பள்ளியில் சேர்ந்துள்ளனர் என அரசு தெரிவிக்கிறது.
வலியுறுத்தல்
இப்படி இருக்கையில் கடந்த ஆறரை ஆண்டுகளாக ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட நியமிக்காத சூழலில் கூடுதலாக 7200 ஆசிரியர்கள் உள்ளனர் என கூறுவது ஆட்சியாளர்களின் நிர்வாகத்திறமையின்மையை தெளிவாக காட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை இவ்வறிக்கை வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.