Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெற்றிடம் உண்டாகிவிட்டது.. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழுக்காக நடைப்பயணம் சென்று சென்று கால்கள் தேய்ந்தாலும் கொள்கை தேயாத கோமான் என்று கூறியுள்ள வைரமுத்து, வா.மு.சேதுராமனின் தோற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் ஈடு கொடுக்கும் இன்னொரு கவிஞன் இங்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆண்டநாயகபுரத்தைச் சேர்ந்த வா.மு.சேதுராமன், நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதி இருக்கிறார். அதேபோல் 1 லட்சத்திற்கும் அதிகமாக கவிதைகளை பதிப்பித்திருக்கிறார். திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றனர்.

VM Sethuraman Vairamuthu Tamil Literature

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவு

அதேபோல் செந்தமிழ்க் கவிமணி, பெருங்கவிக்கோ உள்ளிட்ட பட்டங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இவர் சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்றிரவு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரின் இறுதிசடங்கு விருகம்பாக்கத்தில் நடக்கவுள்ளது. இவரது மறைவையொட்டி தமிழ் ஆர்வலர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில், பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது! இன்றுகூட முரசொலியில், "ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம்!" எனக் கவிதை தீட்டியிருந்த அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதைச் சிந்தை ஏற்க மறுக்கிறது.

வாழ்நாள் முழுவதும் தமிழ்

"தமிழ் தமிழ் தமிழ் என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்திருக்கின்ற ஒரு பெருமகனைக் காண வேண்டுமென்றால், அது பெருங்கவிக்கோ சேதுராமனைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று கருணாநிதியால் பாராட்டப்பட்ட பெருந்தகை அவர்! ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களது புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும் என்று பதிவிட்டிருந்தார்.

கவிஞர் வைரமுத்து இரங்கல்

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், மீசைத் தமிழர் என்று ஆசைத் தமிழர்களால் அழைக்கப்பட்ட பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைந்துவிட்டார் என்ற செய்தியால் நெஞ்சம் ஒருகணம் நின்று துடித்தது. தன் மொத்த வாழ்க்கையை முத்தமிழுக்கே காணிக்கையாக்கிய மாணிக்கத் தமிழர் வா.மு.சேதுராமன்

தமிழுக்காக நடைப்பயணம்

எண்ணம் சொல் செயல் யாவிலும் தனித்தமிழையே தாங்கிப்பிடித்தவர். தமிழுக்காக நடைப்பயணம் சென்று சென்று கால்கள் தேய்ந்தாலும் கொள்கை தேயாத கோமான். அவரது தமிழ்ப்பணி இதழ் என் தொடக்ககாலக் கவிதைகளை வெளியிட்டு வெளிச்சம் தந்தது என்பதை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

வெற்றிடம் உண்டாகிவிட்டது

வளையாத முதுகெலும்பும் நிலையான கொள்கையும் சலியாத உழைப்பும் சரியாத தமிழ்ப் பற்றும்கொண்ட பாவேந்தர் மரபின் நல்லதொரு பெருங்கவிஞன் நம்மைவிட்டு நீங்கிவிட்டார் என்று பாரதிதாசன் கவிதா மண்டலமே கண்ணீர் வடிக்கும் தமிழூட்டி வளர்த்த அவர் பிள்ளைகளுக்கு
என் ஆழ்ந்த இரங்கல். ஒரு வெற்றிடம் உண்டாகிவிட்டது. வா.மு.சேதுராமனின் தோற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் ஈடு கொடுக்கும் இன்னொரு கவிஞன் இங்கு இல்லை. போய்வாரும் கவிஞரே! எங்களோடு உங்கள் தமிழ் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+