கடலூர் தேமுதிக மாநாடு.. வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்! கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
சென்னை: தேமுதிக சார்பில் வரும் ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற உள்ளதாக குறிப்பிட்டு, இந்த மாநாட்டுக்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.
2026 சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழக அரசியல் களத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்து வருகின்றன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணி இந்த முறையும் அப்படியே தொடரும் நிலை உள்ளது.

தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருந்து வருகிறது. கடந்த 2021-ல் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இந்த முறை இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கிறது. விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக அல்லது திமுகவோடு கூட்டணி அமைக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்கிற பெயரில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். வரும் ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடத்தவுள்ள மாநாட்டுக்காக தேமுதிக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக சார்பில் ஜனவரி 9ல் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற உள்ளதாக குறிப்பிட்டு, இந்த மாநாட்டுக்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் பேசியுள்ள பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக கழகத்தின் சார்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், ஒன்றியம், நகர, கிளை கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணி சகோதரிகளுக்கும், தலைவர் விஜயகாந்த்தை உயிர் மூச்சாய் கொண்டுள்ள அனைத்து தொடர்களுக்கும், என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகின்ற ஜனவரி 9 - 2026 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் நடக்க இருக்கின்ற நமது மாநாட்டை மிக பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தரவேண்டும். அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் 2026 தேர்தல் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு எல்லாம் பிரேமலதா விஜயகாந்த், “எங்கள் கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தெரிவிக்கப்படும்” என்று பதில் அளித்து வருகிறார். இதனால், ஜனவரி 9ல் கடலூரில் நடைபெற இருக்கும் இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications