ஸ்டாலினுக்கு ஏற்பட்ட அதே சிக்கல்.. முதல்வர் ஆகும் முன்பே விஜய்க்கு விழுந்த அடி! சமாளிப்பாரா?
சென்னை: சினிமா டூ கோட்டை என்பதைக் கிட்டத்தட்ட வெற்றிகரமாக முடித்துவிட்டார் விஜய். ஆனால், அரசியல் என்பது சினிமா போல ஈஸியானது இல்லை என்பதைத் தேர்தல் முடிவு வெளியான நாள் முதலே விஜய் உணர தொடங்கிவிட்டார். இதற்கிடையே ஸ்டாலின் உட்பட பாஜக ஆளாத முதல்வர்கள் 5 ஆண்டுகள் எதிர்கொண்ட பிரச்சனையை முதல்வர் ஆவதற்கு முன்பே எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் விஜய்!
திமுக, அதிமுக ஆதிக்கத்தை உடைத்து 108 இடங்களுடன் விஜய் கோட்டையை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள சூழலில், அவருக்குச் சட்டமன்றத்தை விடச் சவாலான ஒரு களம் காத்திருக்கிறது அதுதான் ஆளுநர் மாளிகை! கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக ஆளாத மாநிலங்களுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வந்தது. இப்போது விஜய் பதவியேற்கும் முன்பே அந்த மோதல் ஆரம்பித்துவிட்டது.

நெருக்கடி
தமிழகத்தில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் என்பது வெறும் தாமதம் என்பதைக் கடந்து, அரசியல் சாசன நெருக்கடியாக மாறியுள்ளது. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோதே ஆளுநர் மாளிகையில் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வரும். மாநில சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்கள் தொடங்கி எல்லா விஷயங்களும் தாமதம் ஆகும்.
2023ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியபோது இது பெரிதாக வெடித்தது. எப்போதும் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பது ஆளுநர் உரையுடன் தான் தொடங்க வேண்டும். ஆனால், அப்போது ஆளுநர் ரவி, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இருந்த 'பெரியார்', 'திராவிட மாடல்' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்தார். மேலும், தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே அவர் வெளிநடப்பும் செய்தார். அதன் பிறகும் கூட ஆளுநர் தனது உரையை வாசிக்கவே இல்லை.
ஸ்டாலின் சந்தித்த சிக்கல்
நீட் விவகாரத்திலும் முட்டுக்கட்டை போடப்பட்டது. 142 நாட்கள் நீட் மசோதாவைத் தடுத்து வைத்ததிருந்தார். மீண்டும் நிறைவேற்றப்பட்ட பிறகே அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. நீட் மசோதா மட்டுமின்றி, எல்லா மசோதாக்களுக்கும் இதை நிலை தான்! தாமதம் தொடர்ந்தது.. சிறிய மசோதாக்களுக்கும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி விவகாரத்தில் கூட ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்தார். அது அரசியல் சாசன ரீதியாக ஒரு பெரிய பூகம்பத்தை ஏற்படுத்திய நிலையில், பின்வாங்கியிருந்தார். இதுபோல பல சம்பவங்களைச் சொல்லலாம்.
பாஜக ஆளாத மாநிலங்கள்
அதேநேரம் தமிழ்நாட்டில் மட்டுமில்லை.. பாஜக ஆளாத எல்லா மாநிலங்களிலும் இதே நிலை தான்.. கேரளாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல மசோதாக்கள் மீது நீண்ட கால தாமதம் இருந்தது. மேற்கு வங்கத்தில் ஆளுநர் - திரிணாமுல் அரசுடன் நேரடி மோதல் இருந்தது. பஞ்சாப்பில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்தக்கூட உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தெலங்கானாவில் நியமனங்கள் மற்றும் மசோதாக்கள் மீது நிலுவை தொடர்ந்தது.
விஜய்க்கு சிக்கல்!
ஸ்டாலின் எதிர்கொண்ட அதே சிக்கலை தான் இப்போது விஜய்யும் எதிர்கொண்டுள்ளார். ஆனால், பதவியேற்கும் முன்பே விஜய்க்கு சிக்கல் வந்துவிட்டது. பெரும்பான்மையை அவையில் நிரூபித்தால் போதும் என்பது பொம்மை வழக்கில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டு இருந்தாலும் கூட 118 இருந்தால் தான் ஆட்சி அமைக்க அழைப்பேன் என்பதில் ஆளுநர் பிடிவாதமாக இருக்கிறார்.
113 பேர் ஆதரவு இருந்தும், 118 பேரின் நேரடி ஆதரவு கடிதங்களைக் கேட்பது என்பது, குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்றே விமர்சிக்கப்படுகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்பே மோதல் தொடங்கிவிட்ட நிலையில், விஜய் சிஎம் பதவியில் அமர்ந்தாலும் கூட மோதல் போக்கு தொடரும் என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications