சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. வேட்புமனு இன்று தொடங்க உள்ள நிலையில், நேற்று 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த தவெக தலைவர் விஜய் இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இன்றைய தினமே அனைத்து தவெக வேட்பாளர்களையும் வேட்புமனு தாக்க செய்ய அவர் கூறியிருந்தார். இதன்படி தவெக வேட்பாளர்கள் 234 பேரும் அந்தந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6 ஆம் தேதி கடைசி நாளாகும்.

வேட்புமனு தாக்கல்
வேட்பு மனு தாக்கலுக்கு மொத்தமே 4 நாட்கள் தான் அவகாசம் இருப்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் முதல் நாளில் இருந்தே ஆர்வம் காட்டுவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த முறை 4 முனை போட்டி நிலவும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை கிட்டத்தட்ட அறிவித்து முடித்துவிட்டன.
திமுக 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. அதிமுக போட்டியிடும் 167 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.. இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர்களை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரம்பூர் தொகுதியில் போட்டி
சீமானின் நாம் தமிழர் கட்சி முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு அனல் பறக்க பிரசாரம் செய்து வருகிறது. 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் நேற்று வேட்பாளர்களை அறிவித்த நிலையில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளது.
அந்த வகையில், தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் விஜய் களமிறங்கும் நிலையில், பெரம்பூரில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பெரம்பூர் தொகுதியில் இருந்து விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இன்றைய தினமே அனைத்து தவெக வேட்பாளர்களையும் வேட்புமனு தாக்க செய்ய அவர் கூறியிருந்தார். இதன்படி தவெக வேட்பாளர்கள் 234 பேரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக விஜய் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு இருந்த நிலையில் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து இருந்தது. இதையடுத்து, மீண்டும் விஜய் சார்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சென்னை பெரம்பூர் தொகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கலூரி, வியாசர் பாடியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
விஜய் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவரை பார்க்க அதிக அளவில் தவெக தொண்டர்கள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு இடையூறு இன்றி வந்து செல்ல விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டது. எனினும் விஜய் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு சென்றபோதிலும் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications