தவெகவுடன் கூட்டணியா? விஜய்யை ஏன் குறைச்சி மதிப்பிடுறீங்க.. போட்டு உடைத்த டிடிவி தினகரன்
சென்னை: விஜய்க்கு 15 சதவீதம் வாக்கு உள்ளது. பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.. அவர் கூட போனால் என்ன? விஜய் தலைமை தாங்கக் கூடாது என எதுவும் இருக்கிறதா? என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ள டிடிவி தினகரன், "நாங்கள் இடம் பெறும் கூட்டணி வெற்றி பெறும். சீமானிடம் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். திமுகவிடம் கூட்டணி போக மாட்டோம்" என்றும் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த டிடிவி தினகரன், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அந்தக் கூட்டணியில் இருந்து விலகினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் அதிமுக மீண்டும் வந்தது. இதையடுத்து, டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு போதிய முக்கியத்துவத்தை பாஜக அளிக்கவில்லை என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.

கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பி.எஸ்., டிடிவி
பிரதமர் மோடியை சந்திக்க அபாயின்ட்மென்ட் கேட்டு காத்திருந்த ஓ. பன்னீர் செல்வத்திற்கு சந்திக்க நேரம் ஒதுக்காததால் கடும் அதிருப்தி அடைந்த அவர், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடுத்த சில வாரங்களில் டிடிவி தினகரனும் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கு சறுக்கலை ஏற்படுத்துவதாக இந்த விவகாரங்கள் அமைந்தன.
விஜய் தலைமையில் கூட்டணி?
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்தும் டிடிவி தினகரன் விமர்சனங்களை முன்வைத்து உள்ளார். "அண்ணாமலை இருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது. ஆனால், நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் சரியில்லை. பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர் செல்வம் வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரனே காரணம். தங்களை ஒரு துக்கடா கட்சி போல பாஜக நினைக்கிறது" என விமர்சனம் வைத்திருந்தார். முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் முன்பே, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று டிடிவி தினகரன் பேசியிருந்தார்.
சீமானுடன் கூட்டணி கிடையாது
இதனால், டிடிவி தினகரனின் கட்சி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க ஆயத்தமாகிறதா? என்று பேசப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், இது தொடர்பாக பேசியுள்ளார். மேலும், சீமானுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கும் நேரடியாக பதிலளித்துள்ளார். டிடிவி தினகரன் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
"நாங்கள் இடம் பெறும் கூட்டணி வெற்றி பெறும். சீமானிடம் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். திமுகவிடம் கூட்டணி போக மாட்டோம். ஓ. பன்னீர் செல்வம் சொன்னது போல அரசியலில் எதுவும் நடக்கலாம். எங்களுக்கு கதவுகள் திறந்துள்ளன. ஒரே கொள்கையாக இருந்தால் ஒரே கட்சியாகிவிடலாம். எங்களுக்கு முதல் ஆப்ஷன் தேசிய ஜனநாயக கூட்டணிதான். அது உண்மை."
விஜய் ஏன் தலைமை தாங்கக் கூடாது?
"ஆனால் அங்கு உள்ளவர்கள்... அம்மாவின் கட்சியில் உள்ளவர்கள் சரியான முடிவு எடுத்தால் அங்கே போவோம். இது நிபந்தனை எல்லாம் இல்லை. நாங்கள் எப்படி வர முடியும் என்பதுதான். நாங்கள் பிஸ்கோத் கட்சி என்று சொல்கிறீர்கள். விஜய்க்கு 15 சதவீதம் வாக்கு உள்ளது. பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள்.
அவர் கூட போனால் என்ன? விஜய் தலைமை தாங்கக் கூடாது என எதுவும் இருக்கிறதா? இன்னொருத்தரை ஏன் அவமதிக்கிறீங்க? அவர் ஒரு கட்சியை நடத்துகிறார். ஏன்? புதிய கூட்டணி கூட உருவாகலாம். யாரையும் குறைத்து பேசக்கூடாது. விஜய் என்ன தீண்டத்தகாதவரா? கூட்டணிக்கு யார் தலைமை என்பதெல்லாம் விஷயம் இல்லை. அரசியலில் தகுதி, சான்றிதழ் என்பதெல்லாம் கிடையாது."
யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை
"எது தேவையோ... அதை நாங்கள் செய்வோம். நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும்தான். வெற்றியை நோக்கித்தான். யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதற்குதான். அதனால், நீங்கள் எல்லாம் போட்டு உருட்டிக்கொண்டு இருக்காதீர்கள். நான் அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டேன்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications