விஜயின் அடுத்த மூவ்.. களமிறங்கும் நிர்வாகிகள்.. அஸ்திரத்தை கையிலெடுக்கும் தவெக.. முக்கிய முடிவு
சென்னை: தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த கட்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, தவெக மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணியில் விஜய் இறங்கியுள்ளார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்களை அவர் கையாளவுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே மாநாடு ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசியலும் தற்போது விஜயை தான் உற்று நோக்கி கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரிக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், கட்சியின் கொடியை ஏற்றிவைத்து, கொள்கைகள் குறித்து தெரிவித்திருந்தார்.

திமுக தனது அரசியல் எதிரி, பாஜக சித்தாந்த எதிரி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று வீசிய ஒவ்வொரு குண்டும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. திமுக, பாஜக கட்சிகள் விஜய்க்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் விஜய்க்கு எதிராக கூறியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
திமுக விஜயின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருந்த நிலையில், திருமாவளவனும், விஜயும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு நடவடிக்கையையும் விஜய் மேற்கொண்டு வருகிறாராம்.
அந்த வகையில், டிசம்பர் மாதம் முதல் விஜய் மண்டல வாரியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்கு முன்பு இரண்டு முக்கிய கட்சிகளின் ஊழல் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. திமுக, அதிமுக கட்சியின் ஊழல்களைப் பற்றி பொதுமக்களிடம் பிரசாரத்தில் எடுத்துக்கூறும் முன்பு அதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இருக்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உறுப்பினர்களாக சேர ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் இணைந்து வருவதால் சில சமயங்களில் சர்வரே முடங்கி விடுவதாகவும் கூறப்படுகிறது. கட்சியை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டி வரும் விஜய், மாவட்ட செயலாளர்களை நியமிப்பதில் பல முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், தவெக தலைவர் விஜய் தனது இலக்கை நோக்கி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கட்சியை வலுப்படுத்தும் வகையில் அமைப்பு ரீதியாக மாவட்டச் செயலாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம்தோறும் நிர்வாகிகளுடன் கருத்துக் கேட்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட வாரியான நிர்வாகிகள், ஒன்றியம், பேரூர், கிளை என பல்வேறு அணிகளின் நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அவர்களுடைய கருத்துகள், எதிர்பார்ப்புகள், ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் செயலாளர்கள நியமிக்கப்படவுள்ளனர். குறிப்பாக, விஜய் மக்கள் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றிய தனது ரசிகர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அவர்களுக்கு இந்தப் பதவிகளை வழங்கவுள்ளார்.
முதல்கட்டமாக நூறு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். சாதாரணமாகவும், அஜாக்கிரதையாகவும் கட்சிப் பணிகளில் இறங்க கூடாது என்பதிலும், அதே நேரத்தில் சரியான அரசியல் செயல்பாடுகளும் அவசியம் என எண்ணுகிறார். மாவட்ட செயலாளர்களின் இறுதி கட்ட பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications