புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் வரை.. விஜயால் மோசம்போன வேட்பாளர்கள்.. தவெகவில் கடும் அதிருப்தி
சென்னை: தவெக தலைவர் விஜய் மீது அந்த கட்சியின் வேட்பாளர்களும், அடிமட்ட தொண்டர்களும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். அதோடு விஜயை நம்பி புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் அர்ஜுனா வரை பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். எங்க சொத்தையெல்லாம் விற்றும், கடன் வாங்கியும் தேர்தலில் நிற்கிறோம். ஆனால் விஜய் மட்டும் பிரசாரத்துக்கு வராமல் கடைசி நேரத்தில் ரத்து செய்து விடுகிறார் என்று தவெக வேட்பாளர்களும், நிர்வாகிகளும் குமுறி வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தொகுதி வாரியாக இவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அரசியலுக்கு புதிதாக வருகை தந்துள்ள விஜய்க்கு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் விஜய் முறையாக பிரசாரத்துக்கு செல்வது இல்லை. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு தவெகவின் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்று தவெகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.
பிரசாரத்தை ரத்து செய்யும் விஜய்
ஆனால் இப்போது அனுமதி வழங்கியும் கூட விஜய் பிரசாரத்துக்கு செல்வது இல்லை. பிரசாரத்தை தொடர்ந்து ரத்து செய்து வருகிறார். அந்த வகையில் மார்ச் 30ல் விழுப்புரம், ஏப்ரல் 6ல் வில்லிவாக்கம், தி நகர், ஏப்ரல் 7 சைதாப்பேட்டை, ஏப்ரல் 9 மற்றும் ஏப்ரல் 11ம் தேதிகளில் குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, திட்டக்குடி பிரசாரத்தை விஜய் ரத்து செய்துள்ளார். இந்த இடங்களில் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம், காவல்துறை அனுமதி வழங்கியும் விஜய் ரத்து செய்தார். இதில் கும்மிடிப்பூண்டி பரப்புரை புதிய நடைமுறை விதிகள் காரணமாக ஏப்ரல் 19-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றப்படும் வேட்பாளர்கள்
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விஜயின் இந்த தொடர் பிரசார ரத்து என்பது தவெக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களை கவலையடைய வைத்துள்ளது. என்ன தான் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தாலும் விஜயின் பிரசாரம் என்பது மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். இதனால் விஜயின் பிரசாரத்தை அனைத்து வேட்பாளர்களும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் விஜயோ பிரசாரத்தை ரத்து செய்து வருகிறார்.
இதனால் வேட்பாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். குறிப்பாக தி நகரில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவும் போட்டியிடும் நிலையில் அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாக கூறிய விஜய் அதனையும் ரத்து செய்துள்ளார். இப்படியாக பல வேட்பாளர்களும் விஜயின் பிரசாரத்தை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்துள்ளனர்.
குமுறும் வேட்பாளர்கள்
இந்நிலையில் தான் பல தவெக வேட்பாளர்கள் குமுற தொடங்கி உள்ளனர். இதுபற்றி அவர்கள், ''நாங்கள் எங்களின் தகுதிக்கு மீறி கடன் வாங்கி தேர்தலில் நிற்கிறோம். சொத்துகளை விற்பனை செய்து பணம் செலவழிக்கிறோம். ஆனால் விஜய் நேரடி பிரசாரம் இல்லாததால் வாக்காளர்களின் மனநிலையை மாற்றுவது கடினமாக உள்ளது'' என கூறி வருகிறார்.
இதுபற்றி தவெகவினர் மாநில அளவிலான நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''பலரும் கடன் வாங்கி, சொத்துகளை விற்பனை செய்து தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். விஜய் தீவிரமாக பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இதனால் களத்தில் தவெக வேட்பாளர்கள் இன்னும் கூடுதலாக பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது'' என்று கூறியுள்ளார்.
போட்டியிடும் தொகுதியிலும் அலட்சியம்
விஜய் தனது கட்சியின் வேட்பாளர்களின் பிரசாரத்தை தான் கைவிடுகிறார் என்றால் தான் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கும் செல்வது இல்லை.விஜய் இந்த முறை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். அங்கும் அவர் ஒருமுறை மட்டுமே பிரசாரம் செய்துள்ளார்.
பெரம்பூரில் திமுக வேட்பாளர் ஆர்டி சேகர் மற்றும் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா தொகுதியிலேயே பிரசாரம் செய்து வருகின்றனர். அதேபோல் திருச்சி கிழக்கில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், அதிமுக வேட்பாளர்கள் ராஜசேகரன் ஆகியோர் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் விஜய் மட்டும் அங்கு இல்லை. இதனால் விஜய் பிரசாரத்தில் அலட்சியம் காட்டுவதாக தவெகவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications