விஜய் ஜெயிச்சாலும் வேஸ்ட்.. தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு வரும்? இப்படி ஒரு சிக்கல் இருக்கா?
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கும் நிலையில் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து விஜய் ஆட்சி அமைக்கலாம் என சொல்லப்படும் நிலையில் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதற்கு கூட வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள் வரை கூட குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய திருப்பம் உருவாகியுள்ளது. இதுவரை மாறி மாறி ஆட்சி செய்த அதிமுக மற்றும் திமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் முன்னணியில் நிற்கிறது.

தற்போதைய நிலவரப்படி, தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக சுமார் 70 இடங்களிலும், அதிமுக சுமார் 50 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
எனினும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களைக் கடந்த எந்தக் கட்சியும் இதுவரை இல்லை என்பதால், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழலில், விஜய் தலைமையிலான தவெக எவ்வாறு ஆட்சி அமைக்கும் என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது. பெரும்பான்மை எட்டாத பட்சத்தில், கூட்டணி அரசே ஒரே வழியாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. முதல் வாய்ப்பாக, அதிமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் ஆகிய இருவரில் முதல்வர் பதவியை யார் வகிப்பது என்ற கேள்வி இந்த கூட்டணிக்கு பெரிய சிக்கலாக இருக்கும். மேலும், பாஜக அதிமுக கூட்டணியில் இருப்பதால் இந்த வாய்ப்புக்கு மேலும் சிக்கல்களை உருவாக்குகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், திமுக நேரடியாக தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது. காரணம், தேர்தல் காலத்தில் இரு தரப்பும் கடுமையான விமர்சனங்களை பரிமாறிக் கொண்டன. இருந்தாலும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனிப்பட்ட முறையில் ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் போன்றவை கூட்டணிக்குச் செல்லலாம்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. சில தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள இந்தக் கட்சிகள், இறுதியில் யாருக்கு ஆதரவு அளிக்கின்றன என்பது புதிய ஆட்சிக்கான முக்கிய சிக்னலாக இருக்கும். இதற்கிடையில், தவெக தரப்பில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இறுதி முடிவுகள் வெளிவந்த பின்பே கூட்டணி குறித்து தெளிவான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறக் இருக்க எந்தக் கட்சியும் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத சூழலில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சட்டசபை தேர்தலில் எந்த கட்சியும் தனி பெரும்பான்மை பெறாத நிலையில் முதலில் கூட்டணி அமைத்து ஆளுநரிடம் ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரலாம்.
அல்லது தனி பெரும்பான்மை இல்லாவிட்டாலும் அதிக தொகுதிகளில் வென்ற கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கும் ஆளுநர், அதன்பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கோருவார். ஒருவேளை எந்த கட்சியும் தனி பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் குடியரசு தலைவர் ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நடக்கும் ஆட்சி என்பதால் அது பாஜக ஆட்சியாக கூட இருக்கலாம். குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை கூட குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வர வாய்ப்புள்ளது. காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கின்றன. எனவே அதிமுக - திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என்ன முடிவு எடுக்க போகின்றன என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications