ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தெறி! நகர்ப்புறத்திலும் ஒரு கை பார்க்கும் "நண்பாக்கள்"
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு 129 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைமுகத் தேர்தல்
பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு உறுப்பினர்கள் மேயர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்ய உள்ளனர்.

தனித்து போட்டி
இந்த நிலையில் இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக, அமமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் போட்டியிடுகிறார்கள்.

விஜய் மக்கள் இயக்கம்
இதற்காக ஏற்கெனவே ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நகர்ப்புற தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள் இறுதி செய்வர். தேர்தலில் விஜய் படம், இயக்கக் கொடியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

புதுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம்
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பர்வேஷ் கூறுகையில் நகர்ப்புற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வெற்றி பெறக் கூடிய இடங்களில் போட்டியிடுமாறு தலைமை அனுமதி அளித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டையில் உள்ள இரு நகராட்சி, 8 பேரூராட்சிகளில் உள்ள பதவிகளுக்கு 50 பேர் போட்டியிடுகிறார்கள் என்றார்.

விஜய்யுடன் குரூப் போட்டோ
கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு 129 இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வென்றனர். இந்த தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு மத்தியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இத்தனை இடங்களில் வென்று சாதனை படைத்ததோடு அக்கட்சிகளை திரும்பி பார்க்கவும் வைத்துவிட்டனர். எல்லாவற்றுக்கும் மத்தியில் விஜய்யுடன் குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டார்கள். இந்த தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications