விஜய் சொல்லி தான் எல்லாமே நடந்தது? காவல்துறை கான்வாய் வாகனங்கள் நீக்கப்பட்ட சம்பவம்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின்பு ஓவர்நைட்டில் புதிய அரசியல் சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சி தலைவரும், முன்னணி நடிகருமான விஜயை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயமும் தற்போது அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
குறிப்பாக, நேற்று இரவு நடந்த சம்பவம். தமிழ்நாடு காவல்துறை வழங்கியிருந்த கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் திடீரென திரும்ப பெறப்பட்ட சம்பவம், அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், தனிப்பெரும்பான்மையை எட்ட முடியாத நிலை தொடர்கிறது. இந்த சூழலில் விஜயின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற மாற்றங்கள் தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

வெற்றிக்கு பின் வந்த கான்வாய்
மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தவெக-விற்கு ஆதரவமாக வெளியான உடனேயே, விஜயின் அரசியல் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்ததால், அவரது இல்லத்திற்கும் அலுவலகத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அதேநேரத்தில், முதலமைச்சருக்கு வழங்கப்படும் அளவிலான காவல்துறை கான்வாய் வாகனங்களும் அவருக்கு ஒதுக்கப்பட்டன. அதன் பின்னர் கடந்த மூன்று நாட்களாக விஜய் சென்ற அனைத்து இடங்களுக்கும் கான்வாய் பாதுகாப்புடன் பயணம் செய்து வந்தார்.
ஆளுநர் மாளிகை சந்திப்பு
இந்த பரபரப்பான சூழ்நிலையில், விஜய் நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆட்சி அமைக்க அழைப்பது குறித்தும், பெரும்பான்மை குறித்தும் ஆலோசனை செய்தார். அதன்பிறகு அவர் பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தங்கி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து தவெக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் சூழலில், கூட்டணி அமைப்பு மற்றும் ஆதரவு திரட்டல் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகளும் நடந்தது.
திடீரென திரும்பப் பெறப்பட்ட கான்வாய்
இந்நிலையில், விஜயின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை கான்வாய் வாகனங்கள் திடீரென திரும்பப் பெறப்பட்டன. அந்த வாகனங்கள் அனைத்தும் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள காவல்துறையின் செக்யூரிட்டி பிரான்ச் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர், சிறிது நேரம் கழித்து விஜய் எந்த கான்வாய் பாதுகாப்பும் இன்றி தனியாக தனது காரில் நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
என்ன நடந்தது?
கான்வாய் பாதுகாப்பு ஏன் திரும்பப் பெறப்பட்டது என்ற கேள்விகள் எழுந்த நிலையில், காவல்துறை வட்டாரங்கள் முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளன.
அதன்படி, தானாக முன்வந்து தமக்கு வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்களை தற்போது திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு விஜய் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. முழுமையான பெரும்பான்மையை பெற்று அதிகாரப்பூர்வமாக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறை ஆலோசனையா?
இதற்கு முன்பாக, தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் முதலமைச்சருக்கு இணையான கான்வாய் பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழக்கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் விஜயிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.
அந்த ஆலோசனையின் அடிப்படையில் தான் விஜய் கான்வாய் பாதுகாப்பு வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளதாகவும், அரசின் நிர்வாக ரீதியாக முடிவு இல்லை என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
விஜயின் இந்த நடவடிக்கை, சாதாரண பாதுகாப்பு மாற்றமாக மட்டுமல்லாமல், ஒரு முக்கிய அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ பதவியை பெறும் வரை அரசின் சிறப்பு சலுகைகளை பயன்படுத்த விரும்பவில்லை என்ற தோற்றத்தை விஜய் உருவாக்க முயற்சியாக செய்வதாகவும் இது இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தற்போது தவெக கூட்டணி ஆதரவை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், விஜயின் அடுத்த மூவ் என்ன? பாமக உடனான அல்லது விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உடனான என்பது தான்.















Click it and Unblock the Notifications