விஜய் வருகையால் சீமான் அரண்டு உளறுகிறார்.. நாம் தமிழர் கூடாரம் காலியாகும் – அதிமுக கோவை சத்யன்
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை தவிர திமுக, பாஜக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெகவை விமர்சித்து வருகின்றன. தவெகவின் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பு விஜய்யை ஆதரித்து பேசி வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்போது அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக, அதிமுகவும் சீமானை விமர்சித்து வருகிறது. இதுகுறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் கூறுகையில், விஜய் கட்சி ஆரம்பித்ததில் யார் பயப்படுகிறார்களோ இல்லையோ, சீமான் அரண்டு, நடுங்கி பயந்துபோய் இருக்கிறார். அவர் கட்சியில் கட்டமைப்பே இல்லை. கட்சியில் ஆங்காங்கே சில மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

13 வருடங்களாக சீமானை நம்பி வீணாகிவிட்டோம் என்று சொல்பவர்கள் அதிகம். விஜய் மேடையிலேயே யார் வந்தாலும் அரவணைப்போம் என்று அறிவித்துவிட்டார். இதில் முதலில் காலியாக போவது நாம் தமிழர் கூடாரம் தான். நாம் தமிழர் வாக்கு வங்கியில் பெரும் பங்கு விஜய் கட்சிக்கு செல்லும் என்ற கருத்து நிலவுகிறது.
இதனால் சீமான் பயந்து போயுள்ளார். தன்னை காப்பாற்றிக் கொள்கிறாரோ இல்லையோ, வாயை வாடகைக்கு விட்டு பயத்தில் மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார். தமிழக அரசியல் களத்தில் யாரெல்லாம் பொது வாழ்க்கைக்கு வர ஆசைப்படுகிறார்களோ அவர்கள் எல்லாம் எங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவை தான் முன் உதாரணமாக வைத்திருப்பார்கள். அவர்களை மேற்கோள் காட்டித்தான் பேசுவார்கள். அதிமுக கொள்கை என்பது காலம் கடந்த கொள்கை.
ஒன்றே குலம், ஒருவரே தெய்வம் என்பது சமுதாயத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக முன்னிறுத்தப்பட்ட கொள்கை. இதுதான் அடிப்படை. இந்த அடிப்படையை தவிர்த்துவிட்டு, இங்கு யாரும் அரசியல் செய்துவிட முடியாது. இதைப் புரிந்து கொண்டவர்கள் செய்வதைத்தான் விஜய்யும் செய்துள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆளுமையும், தொலைநோக்கு பார்வையும் தமிழ்நாட்டை எப்படி வளர்ச்சி பாதையில் எடுத்து சென்றது என்பதை விஜய் தெரிந்து வைத்துள்ளார். அதனால் தான் அப்படி பேசியிருக்கிறார். ஆட்சி, அதிகாரம் ஒரு குடும்பத்தின் கீழ் இருப்பது ஜனநாயகத்துக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு கட்சியும், ஆட்சியும் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பது மக்கள் நலனுக்கு விரோத செயல். இதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
அதை தற்போது விஜய்யும் கூறியிருப்பதை வரவேற்கிறோம். ஆனால் விஜய்யின் வருகையால் நாம் தமிழர் கூடாரம் தான் காலியாகப் போகிறது. அங்கிருப்பவர்கள் சீமானை நம்பி மோசமடைந்துவிட்டோம் என புலம்புகிறார்கள். விரைவில் அவர்கள் விஜய்யை நோக்கி பயணிப்பதற்கான அறிகுறி தெரிகிறது.
அதற்காக தான் சீமான் உளறுகிறார். அவரின் உளறல் மேலும் அதிகரிக்கும். அதிமுகவை பொறுத்தவரை திமுகவை போல கூட்டணியை நம்பி ஆட்சியை பிடித்து, அவர்களின் அடையாளத்தை மறக்கடிக்கும் வேலையை எப்போதும் செய்யாது. வாக்கு வங்கி சரிவதால் கூட்டணி கட்சியினரை தரக்குறைவாக நடத்துவது அதிமுகவில் எப்போதும் கிடையாது.
எடப்பாடியாரை தலைமையேற்று மக்கள் நலனுக்காக வருபவர்களை அதிமுக அரவணைக்கும். திமுக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகள் தங்களின் அடையாளத்தை தொலைத்துவிட்டோம் என்பதை உணர தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்க தொடங்கியுள்ளனர்.
திமுக கூட்டணி தயவால் மட்டுமே ஆட்சிக் கட்டிலில் உள்ளது. தனித்து போட்டியிடும் தெம்போ, திராணியோ திமுகவுக்கு இல்லை. கூட்டணி உடைந்தால் திமுக காலி. தமிழக அரசியல் களத்தில் கூட்டணி கணக்குகள் மாறிக் கொண்டிருக்கின்றன. எடப்பாடியார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications