விஜயின் வருகை.. தமிழக அரசியல் அடியோடு மாறும்.. அதிமுக வாக்கு சரியும்.. அண்ணாமலை அதிரடி
சென்னை: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அரசியல் பாடம் படிப்பதற்காக 3 மாத பயணமாக லண்டன் சென்றுள்ளார். நவம்பர் கடைசியில் தான் அவர் ஊர் திரும்புகிறார். இந்நிலையில் உதயநிதி துணை முதல்வரானது, விஜய் அரசியல், அதிமுக நிலை உள்ளிட்ட அரசியல் குறித்து பரபர பேட்டியளித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு விக்கிரவாண்டியில், கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இது அரசியல் ரீதியாக பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டில் பேசிய விஜய் தங்களின் கொள்கை, கோட்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

மாநாட்டில் பேசிய விஜய், திருவள்ளுவர், காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் தங்களின் வழிகாட்டிகள். கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாகவும் திமுகவும் எதிரி. நான் ஒரு முடிவுடன் களத்தில் இறங்கியுள்ளேன். திரும்பி எல்லாம் பார்க்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
முக்கியமாக திமுகவை, அவர்கள் பாசிசம் (பாஜக) என்றால் நீங்கள் என்ன பாயாசமா என்று கூறியிருந்தார். மேலும், கூட்டணி ஆட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று சொல்லியிருந்தார். இது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வந்து கொண்டிருக்கிறது.
அதிமுக மட்டும் விஜய்யை பாராட்டும் நிலையில், திமுக மற்றும் பாஜக விஜய்யை விமர்சித்து வருகின்றன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ளார். இதன் காரணமாக அவர் தமிழக அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். அவ்வப்போது சமூகவலைதளங்களில் மட்டும் பதிவுகளை போட்டு வந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை முதல்முறையாக லண்டனில் இருந்தபடி, இங்குள்ள ஒரு சமூக ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் விஜய் அரசியல் வருகை, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டது உள்பட தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் பேசிய அண்ணாமலை, அரசியலில் இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகத்தான் நடக்கும். அப்படி தமிழக அரசியலில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. வழக்கமான சில நடைமுறைகள் உடைந்துள்ளன. இதனால் தமிழ்நாடு அரசியல் முழுமையாக மாறும் என்று நான் நம்புகிறேன்.
குடும்ப அரசியல் தான் செய்கிறோம் என்பதை எந்த கூச்சமும் இல்லாமல் திமுக மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளது. திமுக தங்கள் ஊழல் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை என வாதிடலாம். ஆனால் பொதுவெளியில் அவர்கள் மீது ஆதாரங்களுடன் அவ்வளவு முறைகேடு புகார்கள் வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களிலும் ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை நான் வரவேற்கிறேன். பெரிய ரசிகர் கூட்டம் உள்ள ஒரு பெரிய மாஸ் நடிகர் உச்சத்தில் இருந்து அரசியலுக்குள் வந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டில் பேசிய முதல் நாள் தான் விஜய்யின் சிறந்த அரசியல் நாள். அதேபோல எல்லா நாட்களும் இருக்காது. இது மிகவும் சவாலான பயணம்.
தமிழக அரசியலில் பாஜகவுக்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. விஜய் வரும்போது வாக்குகள் பிரியட்டும். பாஜகவை இந்துத்துவா கட்சி என்ற வன்மைத்தை கக்கியுள்ள பிம்பம் உடையட்டும். கூட்டணி ஆட்சி என்பதை தமிழகத்தில் முதலில் நாங்கள் தான் சொன்னோம். கூட்டணி என்பது ஒரு பார்ட்னர்ஷிப். இருப்பினும் நாங்கள் யாரையும் ஆதிக்கம் செய்வதில்லை.
2026 தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும். இதை நான் ஓராண்டாக கூறி வருகிறேன். எந்தக் கட்சிக்கும் 35-40 சதவீதம் வாக்கு செல்லும் நிலை உருவாகவில்லை. கூட்டணி ஆட்சி என்ற நிலையை நோக்கி தான் நகர்கிறது. ஏற்கனவே ஒரு திராவிட கட்சியின் வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது. அவர்களின் வாக்கு சட்டமன்ற தேர்தலில் 12 சதவீதமாக குறையும். நிர்வாகிகள் வெளியில் வருவார்கள். இது காலத்தின் கட்டாயம். என்றார்.












Click it and Unblock the Notifications