Vijay SAC: அப்பா- மகனையே பிரிச்சிட்டாங்க! எஸ்.ஏ.சந்திரசேகரை விஜய் மதிப்பதே இல்லை- Ex Manager உருக்கம்
சென்னை: தவெகவில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கே மரியாதை கிடையாது. யார் யாரோ புதிதாக வந்து நாட்டாமை செய்கிறார்கள் என திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் பி.டி.செல்வக்குமார் பேசுகையில், நடிகர் விஜய்யுடன் பணியாற்றிய போது அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்ற எண்ணத்தில் நான் அவருடன் இருந்து கட்டமைத்தேன்.
கலப்பை மக்கள் இயக்கத்தை நான் எப்படி கட்டமைத்து ஒழுங்காக நடத்தி வருகிறேனோ, அதே போல் விஜய் மக்கள் இயக்கத்திற்கும் தூணாக இருந்து பணியாற்றியிருக்கிறேன். இதை அவர்களே பல்வேறு தருணங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
காலப்போக்கில் நிறைய பேர் தவெகவுக்கு புதுசு புதுசாக உள்ளே வருகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் எங்களை விடுங்கள், விஜய்யின் அப்பாவாலேயே உள்ளே சென்று செயல்பட முடியவில்லை.
எங்களை மாதிரி மனசு ஒத்தவர்கள் அங்கு பயணிக்க முடியாத ஒரு சூழல் வருகிறது. விஜய் நிலவு போல் பவுர்ணமியில் பிரகாசிப்பார். அமாவாசையில் மறைந்து போவார்.
மக்களுக்கு முறையாக விஜய் சேவை செய்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வாரா என்பது எனக்கு தெரியவில்லை. என்னை பொருத்தமட்டில் என் உடல், பொருள், ஆவி என எல்லாவற்றையும் மக்களுக்காக சேவை செய்ய அர்ப்பணிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இதற்கு ஒரு நல்ல கட்டமைப்பு தேவைப்பட்டது. அது இன்றைய சூழலில் திமுக தரப்பில் சிறப்பாக செய்து வருவதால் நான் அதில் இணைந்தேன். அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை. அப்பாவையே பிரிக்கிறார்கள் என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம் சொல்லுங்கள்.
தகப்பன் சந்திரசேகர், விஜய்யின் வாழ்க்கைக்காக உடல், பொருள், ஆவி என அத்தனை தியாகங்களையும் செய்தவர். அவருக்கே உரிய மரியாதை இல்லை. புதிதாக வருவோரால் விஜய்யை நல்ல விதமாக வழிகாட்ட முடியாது. புலி படத்திற்கு நான் எவ்வளவு சம்பளம் கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். புலியால் நான் பயந்து பயந்து ஓடிகிட்டு இருக்கேன், அது போதாதா என்றார்.
செல்வகுமார்,"வசீகரா", "மதுர", "கஜினி", "ஆதி", "போக்கிரி", "ஆழ்வார்", "படிக்காதவன்" (தனுஷ்), "அழகிய தமிழ்மகன்", "வேல்", "வில்லு", "வேட்டைக்காரன்", "சுறா", "காவலன்" உள்ளிட்ட படங்களில் பிஆர்ஓ-வாக இருந்துள்ளார். "நாட்டாமை", "விஷ்ணு", "கோயமுத்தூர் மாப்பிள்ளை", "ஜெயில்" ஆகிய படங்களில் நடித்துள்ளார். "பந்தா பரமசிவம்", "ஒன்பதுல குரு" படங்களை இயக்கியும் "புலி", "போக்கிரி ராஜா" படங்களை தயாரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications