ஓவர்நைட்டில் விஜய் இமேஜ் மாறியது.. முதல்வராகும் கனவு பறிபோனதா? அடுத்தடுத்து விஜய் செய்யும் தவறுகள்
தமிழக அரசியல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்த நடிகர் விஜய்யின் இமேஜ் கடந்த சில நாட்களில் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக தலைவர், முதலமைச்சர் பதவிக்கு நெருங்கிய நிலையில், தற்போது அவரது அரசியல் பயணமே கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அடுத்தடுத்து செய்யப்படும் தவறுகள் அவரது முதல்வர் கனவை பறிப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

குதிரை பேரம் குற்றச்சாட்டு
தவெகவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்படும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) எம்எல்ஏ காமராஜ் ஆதரவு அளிப்பதாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
டிடிவி தினகரன் குதிரை பேரம் நடப்பதாக குற்றம்சாட்டிய நிலையில், தவெக தரப்பு ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் காமராஜ் காரில் இருந்தபடி கையெழுத்திடும் காட்சி இருந்தது. இது தவெக தரப்பே குதிரை பேரத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தச் சம்பவம் விஜய்யின் "தீய சக்தி, தூய சக்தி" என்ற பேச்சுக்கு எதிராக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி நிபந்தனைகளை மீறியது பெரும் தவறு
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சிகளை நாடக்கூடாது என்ற நிபந்தனையை விதித்திருந்தன. ஆனால் தவெக இந்த நிபந்தனையை மீறி அமமுகவுடன் தொடர்பு கொண்டது. இது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியலில் புதியவர் என்பதால், அவரது ஆலோசகர்களின் முடிவுகளே இத்தகைய தவறுகளுக்கு காரணம் என்று பலரும் கருதுகின்றனர்.
ஆலோசகர்களை மாற்ற வேண்டும்?
அரசியல் - அனுபவமற்ற துறையில் விஜய் வெற்றி பெற வேண்டுமானால், அவரது ஆலோசகர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று அரசியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். தற்போது விஜய் மேடையில் மட்டும் பேசும் ஒரு நபர் போல இருப்பதாகவும், பின்னணியில் பலர் அவரை கட்டுப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
தவெக கட்சியில் எதிர்கட்சிகளின் பல உளவாளி இருப்பதாகவும் அவர்களை நீக்கிவிட்டோ அல்லது அவர்களுடைய ஆலோசனைகளுக்கு செவி சாய்க்காமல் அனுபவசாலியான செங்கோட்டையனுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள்ளும் சரி, கட்சிக்கு வெளியிலும் கருத்து நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் கனவு பறிபோகும் அபாயம்
இந்த அடுத்தடுத்த தவறுகள் விஜய்க்கு கிடைத்திருந்த பொதுமக்கள் ஆதரவையும், எதிர்க்கட்சிகளின் சில அனுதாபத்தையும் இழக்கச் செய்துள்ளன. முழுமையான பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி அமைத்தாலும், தினமும் கூட்டணி இழுபறிகள், கொள்கை மோதல்கள், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை ஆகியவை அவரது இமேஜை மேலும் பாதிக்கும்.
இந்தச் சூழலில், விஜய் தனது ஆலோசகர்களை மாற்றி, அரசியல் அனுபவம் கொண்டவர்களின் வழிகாட்டுதலுடன் முன்னேறினால் மட்டுமே அவரது அரசியல் பயணம் வெற்றியடையும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எளிய மக்கள் இந்த வளர்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். விஜயின் அடுத்த நடவடிக்கை அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
ஆளுநர் சந்திப்பில் துவங்கிய பிரச்சனை
தவெகவின் மூத்த தலைவர்கள் சிலர், விஜய்யை காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஏற்றுக்கொள்ளவும், உடனே ஆளுநரை சந்திக்கவும் வற்புறுத்தியதால் சில நாட்களுக்கு முன் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனுபவசாலியான செங்கோட்டையன், "தவெக தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் 108 இடங்களுடன் ஆட்சி அமைக்க உரிமை கோருங்கள். பின்னர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கலாம்" என்று முன்கூட்டியே எச்சரித்திருந்தும், தவெகவின் மூத்த தலைவர்கள் சிலரின் அறிவுரையை விஜய் கேட்டார்.
இதன் விளைவாக, தவெக தரப்பு காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களின் பெயர்களையும் சேர்த்து ஆதரவுக் கடிதம் அளித்தது. இதைப் பார்த்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், "தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் உரிமை கோராமல், கூட்டணி அடிப்படையில் கோருகிறீர்களா? மீதமுள்ள 5 எம்எல்ஏக்களின் ஆதரவு எங்கே?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்தத் தவறு காரணமாக, விஜய் ஆளுநரை இரண்டாவது முறையும் சந்தித்தபோதும் முழுமையான பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் தான் மீண்டும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை துவங்கி தற்போது விசிக-வின் முடிவுக்காக விஜய், தவெக-வினர் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் காத்திருக்கிறது.














Click it and Unblock the Notifications