உளவுத்துறை கைக்கு போன ரிப்போர்ட்.. விஜய் கரூருக்கு செல்வது எப்போது? கன்பாஃர்ம் ஆன தேதி இது தான்!
சென்னை: கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க திட்டமிட்டிருந்த நடிகரும் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய்யின் கரூர் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17ஆம் தேதி விஜய் கரூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சி இடம் மற்றும் நிர்வாக அனுமதி பிரச்சினைகள் காரணமாக அவரது வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இம்மாத இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் விஜய் கரூர் செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதையடுத்து, உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் நோக்கில் விஜய் கரூர் பயணத்துக்குத் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக, தவெக நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்திலும், கரூர் எஸ்.பி. அலுவலகத்திலும் மனு அளித்து அனுமதி கோரியிருந்தனர். நிகழ்ச்சி கரூர்-ஈரோடு சாலையில் உள்ள கேஆர்வி மெரிடியன் ஹோட்டலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்த ஹோட்டல் முந்தைய கூட்டம் நடந்த இடத்திற்கு அருகில் இருப்பதால், போலீசார் மாற்று இடம் தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில், விஜய் வருகை குறித்து தகவல் பரவியதும், கரூரில் பெரும் ரசிகர் திரள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இட ஒதுக்கீட்டில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில ஓட்டல் மற்றும் மண்டப உரிமையாளர்கள் அரசியல் அழுத்தம், பாதுகாப்பு பிரச்சினைகள் எனக் கூறி இடத்தை வழங்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், விஜய்யின் கரூர் பயண இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் முடிவடைந்த பின் விஜய் கரூருக்கு வருவார் என கூறப்படுகிறது. போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, அவரது வருகை இம்மாத இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில், தீபாவளிக்குப் பிறகு நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தார். இதையடுத்து கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும், விஜய் வீடியோ கால் மூலம் குடும்பத்தினருடன் பேசிச் சமாதானப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்குகளில் 20 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications