தமிழக அரசுக்கு நடிகர் விஜய் சேதுபதி வைத்த முக்கிய கோரிக்கை!
சென்னை: பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அப்பழுக்கற்ற நேர்மையாளருமான நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "நல்லகண்ணு ஐயாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். விடுதலை 2 படத்தில் நடித்தது நல்லக்கண்ணு ஐயாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது.
தோழர் நல்லகண்ணு ஐயாவின் வாழ்க்கை வரலாறு பள்ளி பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். விடுதலை 2 படத்தில் மஞ்சு வாரியர் சொல்லும் வசனங்களைப் போல தோளில் துண்டு போடுவதும், காலில் செருப்பு அணிவதும், தீபாவளி பொங்கலுக்கு போனஸ் வாங்குவதும், வேலை நேரம் 8 மணி நேரமாக இருப்பதும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருப்பதும் நல்லகண்ணு மாதிரி பல தோழர்கள் போராடி ரத்தம் சிந்தி வாங்கி கொடுத்தது என்று எத்தனை பேருக்குத் தெரியும்.
இது பற்றித் தெரியாத பல பேரில் நானும் ஒருவன். அதில் பலனடைந்த பல பேர்களில் நானும் ஒருத்தன். தோழர் நல்லகண்ணு பற்றித் தெரிந்து கொள்வது எனக்குச் சந்தோஷம். சிவப்பு சிந்தனையும், வாழ்வியலும், நம் வரலாறும் அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர வேண்டும். அவரோடு நான் பழகிய நாட்கள் மிகக் குறைவாக இருந்தாலும் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்" என்று பேசினார் விஜய் சேதுபதி.












Click it and Unblock the Notifications