Karur: கரூர் சிபிஐ நெருக்கடிக்கு மத்தியிலும் NDA கூட்டணியை தவிர்த்த விஜய்!.. காரணங்கள் என்ன?
சென்னை: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தவெகவின் கரூர் பொதுக் கூட்டம் நடைபெற்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, உருவான சர்ச்சைகள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் மத்தியில் என்டிஏ கூட்டணியில் இணைய விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. கரூர் சம்பவத்தின் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணையாமல் விஜய் தனிப்பாதையைத் தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற தவெக (TVK) பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, அங்கு திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் தாமதமாக வந்தது தான் காரணம் என்று திமுக குற்றம் சாட்டி வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றம் சென்றதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவி்டது. இந்த விசாரணை, முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் நடைபெற்றது.
சிபிஐ விசாரணை
தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர். தவெக தலைவர் விஜய்யும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தொடர்ந்து ஆஜராகி விளக்கமளித்து வந்தார். கரூர் சம்பவம் நடைபெற்ற நிலையில், அப்போது பாஜகவினர் விஜய்க்கு ஆதரவாகப் பேசி வந்தனர். அரசின் அலட்சியமே இந்த கொடூர சம்பவத்துக்கு காரணம் என்று கூறி வந்தனர்.
இதையடுத்து, அதிமுக - தவெக இடையே கூட்டணி ஏற்படுமா என்ற பேச்சுகளும் எழுந்து வந்தன. அந்த சமயத்தில் தவெகவும் அதிமுகவை எதிர்க்காமல் இருந்து வந்தது. திமுக மெகா கூட்டணிக்கு ஈடு கொடுக்கும் வகையில் என்டிஏ கூட்டணியில் தவெகவை இணைப்பதற்கு விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்தது. பல்வேறு அழுத்தங்கள் விஜய்க்கு கொடுக்கப்பட்டதாக பேசப்பட்டிருந்தாலும் விஜய் என்டிஏ கூட்டணியில் இணையவில்லை.
என்டிஏ கூட்டணியை தவிர்த்த விஜய்
இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அனைத்து தரப்பினரிடமும் ஆதரவைப் பெற வேண்டும் என்ற அவரது அரசியல் நோக்கம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பாஜகவுடன் இணைந்தால் கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமிய வாக்குகள் விலகும் வாய்ப்பு இருப்பதால், அந்த அபாயத்தை தவிர்க்க முயன்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழகத்தில் பாஜகக்கு தனிப்பட்ட வாக்கு வங்கி குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் மீது நேரடி எதிர்ப்பு இல்லாமல் ஒரு soft corner தவெகவுக்கு இருந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. மொத்தத்தில், எந்த பெரிய கூட்டணியிலும் இணையாமல், தனியாக வளர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் விஜய் இந்த முடிவை எடுத்தார் என்று கருதப்படுகிறது. மொத்தத்தில், கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து உருவான அரசியல் சூழ்நிலையிலும், விஜய் எடுத்த இந்த முடிவு அவரது தனித்த அரசியல் பயணத்தை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications