"குஷி"யில் விஜய்! கரூர் செல்லும் முன்பு பிரஸ் மீட்?
சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய், ஓரிரு நாளில் கரூர் செல்லவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் சில விளக்கங்களை அளிப்பார் என சொல்லப்படுகிறது. திருப்புவனம் அஜித் குமார் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது கரூர் சம்பவத்திற்கு மட்டும் சிபிஐ விசாரணை உத்தரவை வரவேற்பது ஏன் என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வார் என தெரிகிறது.
கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம், ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில் "கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும். சிபிஐ மாதந்தோறும் விசாரணை அறிக்கையை அஜய் ரஸ்தோகியிடம் தர வேண்டும். அந்த ஆணையத்தில் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கவே கூடாது" என தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த உச்சநீதிமன்ற உத்தரவால் விஜய் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளாராம். தவெகவை கரூர் சம்பவத்தில் சிக்க வைத்ததாகவே நிர்வாகிகளும் விஜய்யும் கூறி வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் விஜய் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளாராம்.
இதனால் அவர் விரைவில் கரூருக்கு செல்வார் என தெரிகிறது. அவ்வாறு கரூர் செல்வதற்கு முன்பு விஜய், செய்தியாளர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது. அப்போது அவர் நீண்ட ஒரு விளக்கத்தை அளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது திருப்புவனம் கோயில் நிர்வாகி அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் தனது கட்சியினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார். பாஜகவின் கைப்பாவையான சிபிஐ விசாரித்தால் இந்த கேஸ் என்னவாகும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை விஜய் வரவேற்றுள்ளார். அது போல் விஜய் ஏன் கரூர் மக்களை சந்திக்கவில்லை, பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பார் என சொல்லப்படுகிறது.
இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்தும் நிர்மல் குமாரும் விஜய்யை சந்தித்து நேற்று இரவு ஆலோசனை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் அடுத்த கட்ட பிரச்சாரம் குறித்து விஜய் சில விஷயங்களை முன்னெடுப்பார் என சொல்லப்படுகிறது. பிரச்சாரம் செய்யலாம் என ஆதவ் அர்ஜுனா சொன்ன போது கூட விஜய், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரட்டும், பிறகு பார்க்கலாம் என்றாராம். தற்போது சாதகமான தீர்ப்பும் வந்துவிட்டது. இனி பிரச்சாரம்தான்! Champagne சாரி campaign (கோட் பட பாடலில் வருவதை போல்)!












Click it and Unblock the Notifications