அம்பேத்கர், பழங்குடி பற்றி பேசிய விக்ரமன்.. வெட்டி வீசிய விஜய் டிவி! பிக்பாஸால் வெடிக்கும் சர்ச்சை
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கர் குறித்தும் மலைப்பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் அகற்றப்படுவது குறித்தும் போட்டியாளர் விக்ரமன் தெரிவித்த கருத்துகள் ஒளிபரப்பப்படாதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 வது சீசன் விஜய் டிவியில் தற்போது 74 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதனை நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் வாரந்தோறும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நடிகர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், பாடகர்கள், நடன கலைஞர்கள், நகைச்சுவை கலைஞர்கள் என பலரும் பங்கேற்று இருக்கிறார்கள்.

விசிக விக்ரமன்
இந்த வரிசையில் இந்த ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் விக்ரமனை அரசியல்வாதி என்றே அறிமுகம் செய்து வைத்தார் கமல்ஹாசன். தொடக்கத்தில் அமைதியாக இருந்த விக்ரமனும் இதில் ரசிகர்களின் மனதை கவர்ந்து இருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கில தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் விவாதங்களில் பேசி பிரபலமான விக்ரமன் ஏராளமான போராட்டக் களங்களிலும் பங்கெடுத்து உள்ளார்.

துணிச்சலான பேச்சு
இதில் தான் எந்த நோக்கத்திற்காக உள்ளே சென்றாரோ அதை அவர் சிறப்பாக செய்து வருகிறார். பட்டியலின, பழங்குடியின மக்கள், பெண்கள், திருநங்கைகள் ஆதரவாக தொடர்ந்து அவர் பேசி வருகிறார். சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் ட்விட்டரில் பதிவு செய்து வந்த விக்ரமன், அதையே பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் செய்து வருகிறார்.

பெரும் ஆதரவு
பிக்பாஸ் போட்டியாளர்கள் பிற்போக்கான, பெண்கள் அல்லது குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை பேசினால் அதை வெளிப்படையாகவே கண்டித்து வந்தார். அதேபோல் அநியாயமாகவும், மற்றவர்களையும் அவமானப்படுத்தும் விதத்திலும் பேசுபவர்களை முதல் ஆளாக கண்டிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார். இதனால் வீட்டிற்கு உள்ளே அவருக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், வெளியில் மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு உள்ளது.

கமல்ஹாசனிடம் பாராட்டு
அதேபோல் ஒரு எபிசோடில் துப்புறவு தொழிலாளியாக நடித்து மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்திற்கு எதிரான விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தினார். அதேபோல், அந்நியன்போல் நடிக்க சொன்ன ஒரு டாஸ்கில் அந்த படத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று வெளிப்படையாகவே கூறினார். விக்ரமனை போட்டியாளர்கள் அரசியல்வாதி என்று விமர்சித்தாலும், அவரது துணிச்சலான கருத்துக்களை கமல்ஹாசன் பாராட்டி வருகிறார்.

கனா காணும் காலங்கள் டாஸ்க்
இந்த நிலையில் இந்த வாரம் கனா காணும் காலங்கள் என்ற வாராந்திர டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் டாஸ்கில் ஆரம்ப பள்ளி தமிழ் ஆசிரியராக நடித்த விக்ரமன், ஆத்திச்சூடிக்கும் அறத்திற்கும் அளித்த விளக்கத்தை பலரும் பாராட்டியதுடன் மாணவர்களுடன் ஆசிரியர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இருந்தார்.

விக்ரமனின் ஓவியம்
நேற்று உயர்நிலைப்பள்ளி டாஸ்கில் விக்ரமன் மாணவராக நடித்தார். அதில் மாணவர்கள் சமூக கருத்தை தெரிவிக்கும் வகையில் ஓவியம் வரைய வேண்டும் என்று பிக் பாஸ் தெரிவித்தார். அதில் சக போட்டியாளர்களின் ஓவியங்களை வரைந்து அதில் விளக்கம் கொடுத்திருந்தனர். ஆனால், விக்ரமன் வரைந்த ஓவியமும், அதற்கு அவர் அளித்த விளக்கமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 1 மணி நேர எபிசோட்டில் காட்டப்படவில்லை.
|
பழங்குடி மக்களுக்காக பேசிய விக்ரமன்
மலைப்பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் அகற்றப்படுவதாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், மலைப்பகுதிகளை ஆக்கிரமித்து மரங்களை வெட்டுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஓவியம் வரைந்து விளக்கம் விக்ரமன் கொடுத்தது 24 மணி நேர எபிசோடில் ஒளிபரப்பானது. மிக முக்கியமான இந்த சமூக கருத்தை நீக்கியது ஏன் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
|
கடிதம் எழுதும் டாஸ்க்
அதேபோல், தாங்கள் விரும்பியவர்களுக்கு கடிதம் எழுதும் டாஸ்க் வழங்கப்பட்டது. சக போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதியதை வாசித்துக் காட்டினர். ஆனால், விக்ரமன் கடிதம் எழுதியது ஒரு மணி நேர டிவி எபிசோடிலும், 24 மணி நேர நேரலையும் காட்டப்படவில்லை. இதற்கான காரணத்தையும் விக்ரமன் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
|
அம்பேத்கருக்கு எழுதிய கடிதம்
விக்ரமன் அன்புள்ள புரட்சியாளார் அம்பேத்கருக்கு என்று போட்டு, "ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த நாட்டின் நிலையை தலைநிமிர செய்தவர் நீங்கள் என்ற அடிப்படையில்..." என அவர் கடிதம் எழுதும் காட்சி மட்டும் சில நொடிகள் 24 மணி நேர நேரலையில் காட்டப்பட்டது. இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த ரசிகர்கள், நான் சட்டமேதையும், சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராக போராடியவருமான அம்பேத்கர் பற்றி விக்ரமன் கடிதம் எழுதி அதை பற்றி பேசும் காட்சியை காட்டாதது ஏன் கேள்வி எழுப்பி கமல்ஹாசனை ட்விட்டரில் டேக் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications