தவெக - ஓபிஎஸ் கூட்டணி இணைந்தால்.. யாருக்கு லாபம்? விஜய்க்கு நேரப்போகும் சிக்கல்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டால், அது விஜய்க்கு பயனளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், பாஜகவின் பிடியில் இருந்த ஓபிஎஸ் திடீரென விலகி தவெக உடன் கூட்டணி அமைப்பது, அவர் கட்சியினர் மத்தியிலேயே விமர்சனத்தைப் பெறும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
அண்மையில் தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வந்த பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி, திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, தமாகா தலைவர் ஜிகே வாசன், ஏசி சண்முகம் உள்ளிட்ட பலரும் வரவேற்றனர்.

ஆனால் பிரதமர் மோடியை வரவேற்க அனுமதி கோரிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ஓபிஎஸை பாஜக மேலிடம் கழற்றிவிட்டதாகப் பார்க்கப்பட்டது. அதற்கு முன்பாக அமித்ஷா வந்த போதும் ஓபிஎஸை சந்திக்கவில்லை. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் திடீரென பாஜகவைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் திமுக மற்றும் தவெக இடையில் மட்டுமே போட்டி என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக எதிர்காலத்தில் பரிசீலிப்போம் என்றும் ஓபிஎஸ் கூறி இருந்தார். தற்போது பாஜக கழற்றிவிட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு இம்முறை விஜய்க்கு ஆதரவளிக்கும் என்றும், அவர்களுடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் விஜய் கட்சித் தொடங்கியதில் இருந்தே எந்தவொரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியும் தவெகவுக்கு செல்லவில்லை. அதிமுகவில் இருந்து விலகிய அன்வர் ராஜாவும், திமுக பக்கமே சாய்ந்தார். அதுமட்டுமல்லாமல் டெல்டா, வட மாவட்டங்களில் விஜய்க்கு ஆதரவு இருந்தாலும், தென் மாவட்டங்களில் விஜய்க்கு பெரியளவில் ஆதரவு கிடைக்கவில்லை.
அதற்கு முக்குலத்தோர் சமூகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எந்த பிரபலமான தலைவரும் தவெகவில் இல்லாததே காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் தவெகவுடன் இணைந்து செயல்பட வாய்ப்புகள் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் தரப்பைச் சேர்த்துக் கொள்ளும் பட்சத்தில் அது விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படும்.
ஏனென்றால் விஜய் தற்போது புதிதாக அரசியல் கட்சிக்கு வந்திருப்பதால், அரசியல் ரீதியாக எந்த குற்றச்சாட்டுகளையும் முன் வைக்க முடியாது. அதேபோல் ஒரு மாற்று அரசியலை விரும்புவோர் விஜய்க்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருந்து வருகிறார்கள். அதேபோல் அரசியல்படுத்தப்படாதவர்களும் தவெகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
ஆனால் ஓபிஎஸை சேர்க்கும் பட்சத்தில் விஜய் மீது விமர்சனங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் 3 முறை முதல்வராக இருந்துள்ள ஓபிஎஸ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதேபோல் ஓபிஎஸ் எதிர்த்து அரசியல் செய்து பழகியவர் கிடையாது. பாஜகவின் பிடியில் இருந்ததால் முக்குலத்தோர் சமூக மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறைந்து வந்தது.
இந்த நிலையில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து திடீரென மாற்றம் அடைந்துள்ள ஓபிஎஸை சேர்த்தால், விஜய்க்கு அக்கட்சியினர் மத்தியிலும் சிக்கல் உருவாகும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தவெகவை தொடங்கியதில் இருந்தே விஜய் பாஜக எதிர்ப்பில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைந்தால், அது விஜய்க்கு பின்னடைவை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications