விசிக நடத்தும் போதை ஒழிப்பு மாநாட்டுக்கு எங்களை அழைத்தால்.. விஜய பிரபாகரன் சொன்ன தகவல்!
சென்னை: விசிக நடத்த உள்ள போதை ஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் முறையாக அழைத்தால் தலைமையில் பேசி கலந்து கொள்வது குறித்து முடிவெடுப்போம் என தேமுதிக விஜய பிரபாகரன் தெரிவித்து உள்ளார். மதவாத, சாதியவாத கட்சிகள் தவிர மற்ற கட்சிகளை அழைப்போம் என திருமாவளவன் கூறிய நிலையில் விஜய பிரபாகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சுமார் 67 பேர் உயிரிழந்த நிலையில், பலரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அரசே மது விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் உள்பட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. வி.சி.க மகளிரணி சார்பில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டில் அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெறுவது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம். மதுக்கடைகளை மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், “மக்கள் பிரச்சனைகளுக்காக மதவாத, சாதியவாத சக்திகள் தவிர மற்ற எந்த சக்திகளுடனும் இணைவோம். மது ஒழிப்பு மாநாட்டிற்கு எந்த கட்சி வேண்டுமானாலும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடில் உள்ள கட்சிகள் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது. இது அரசியல் அல்ல. அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்றார்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் இம்மானுவேல் சேகரன் 67 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜய பிரபாகரன்.
அப்போது, திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு வந்துள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், “திருமாவளவன் மாற்று கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். இருந்தாலும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் கட்சி தலைமையில் பேசி மாநாட்டில் கலந்து கொள்வது கொடுத்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications