சாத்தான்குளம் தந்தை, மகன் சாவு.. காவல்துறையினருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்- விஜயகாந்த் கண்டனம்
சென்னை: வேலியே பயிரை மேய்ந்ததை போல காவல்துறை விசாரணையில், தந்தை, மகன் மரணமடைந்துள்ளதாக, தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோவில்பட்டி சிறையில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை, மகன் மரணம் சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் மரணம் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அந்த காவல் அதிகாரிகள் இரண்டு பேரையும் பணியிடமாற்றம் செய்திருந்தாலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விசாரணைக்கு அழைத்துச் சென்றால், விசாரணை மட்டும்தான் செய்யவேண்டும். அவர்களை கொல்வதற்கு எந்த காவல்துறைக்கும் அதிகாரமில்லை, இது ஜனநாயகத்திற்கும், மனித நேயத்திற்கும் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது.
எனவே இதை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும். இதுபோன்ற காவல்துறையினருக்கு கடுமையான தண்டனை வழங்கி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் தமிழக அரசு பார்த்துக் கொள்ளவேண்டும்.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் மரணம் என்ற செய்தி மக்களிடையே பல சந்தேகங்களை எழுப்புகிறது. எப்படி இறந்தார்கள். அதற்கு பின்னால் என்ன நடந்தது என்கிற மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியே அனைவரின் மனதிலும் தோன்றுகிறது. இது "வேலியே பயிரை மெய்தது போல்" என்ற பழமொழிக்கு ஏற்ப மக்களை காக்க வேண்டிய காவல்துறையே காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட இந்த செயல் உண்மையில் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications