விஜய் தரப்போகும் டபுள் விருந்து? களைக்கட்டப் போகும் செப்டம்பர்! தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?
சென்னை: வரும் செப்டம்பர் எப்படியும் தவெக தொண்டர்களுக்குக் கொண்டாட்டம் தரும் மாதமாக அமையப்போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான கொடி நாளை வெளியாகும் என்று அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரிய வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் 2024 ஆகஸ்ட் 22.

நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, ரசிகர் மன்றத்தின் கொடியை விஜய் கட்சிக்குப் பயன்படுத்தப் போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. நேற்றே அவர் தனது பனையூர் வீட்டில் கட்சிக் கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்ததாக வீடியோ வெளியானது. அதில் மஞ்சள் நிறத்தில் விஜய் முகம் பொறிக்கப்பட்டிருந்தது. அப்படி என்றால் நாளை அறிமுகமாகப் போகும் கொடி இதேதானா என்பது தெரியவில்லை. ஆனால், விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்த உடன் அவரது எக்ஸ் தளத்தில் பேனர் என்னவோ மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில்தான் உள்ளது. கூட்டிக் கழித்து பார்த்தால் விஜய் கட்சியின் கொடி மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. கிட்டத்தட்ட தெலுங்கு தேசம் சாயலில் கொடி இருக்கப் போகிறது.

எப்படிப் பார்த்தாலும் இந்த செப்டம்பர் மாதம் GOAT திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதே மாதம் தவெகவின் மாநாட்டை விஜய் நடத்தத் திட்டமிட்டு வருவதாக மற்றொரு பக்கம் தகவல் கசிந்து வருகிறது. விஜய் கட்சியை முறையாக அறிவிப்பதற்கு முன்பே அவருடன் சேர்ந்து செயல்படத் தயார் என்று சீமான் பேசி இருக்கிறார். ஆனால், அதற்கு இன்னும் விஜய் தரப்பிலிருந்து பதில் வரவில்லை. இது குறித்துப் பேசிய உள்ள மூத்த பத்திரிகையாளர் எஸ் பி லக்ஷ்மணன், "சீமான் ஏற்கெனவே விக்கிரவாண்டி தேர்தலில் எடப்பாடியிடம் ஆதரவு கேட்டார். கள்ளச்சாராயம் குடித்துப் பலியானவர்களுக்காக எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டத்திற்குச் சீமான் ஆதரவு அளித்திருந்தார்.
அப்படி என்றால் விஜய்யை அழைத்துக் கொண்டு சீமான் 2026இல் எடப்பாடியுடன் கூட்டணிக்குப் போகப் போகிறாரா? சீமான் வழியே எடப்பாடியிடம் விஜய் போகவேண்டிய தேவையே இல்லை. அவர் நினைத்தால் நேரடியாகவே அதிமுகவுடன் கூட்டணிக்குப் போக முடியும். எனவே அவர் சீமானுடன் கூட்டணிக்குப் போவதற்கு வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகிறது. செயற்குழு கூட்டத்தில் அடுத்த ஆட்சி நம்முடையது தான் என்கிறார் எடப்பாடி. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அடுத்த ஆட்சி நம்முடையது தான் என ஸ்டாலின் சொல்கிறார்.
இந்தநிலையில் விஜய் தனித்து நின்று கட்சியின் பலத்தை நிரூபிப்பதுதான் எதிர்கால அரசியலுக்கு நல்லது. அதுவே கட்சிக்கு வலு சேர்க்கும். அப்படி விஜய் தனியாக நின்றால் யாரைப் பாதிக்கும் என்பதையும் அலசி ஆராய வேண்டி இருக்கிறது" என்கிறார். நாளை கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்குக் காலை 6 மணிக்கு நிர்வாகிகள் வந்துவிட வேண்டும் என தவெக உத்தரவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. நிகழ்ச்சிக்கு வருபவர்கள் யாரும் செல்போனை அலுவலக வளாகத்திற்குள் கொண்டுவரக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு கொடியேற்றும் பொது நிகழ்ச்சிக்கு இத்தனைக் கட்டுப்பாடுகள் தேவை தானா என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications