இனி தான் நம்ம ஆட்டமே ஆரம்பம்.. விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய விஜய்! பரபரப்புக்கிடையே பக்கா ப்ளான்!
சென்னை: விஜய் செயற்குழு கூட்டத்தை நடத்திய பிறகு அவர் மீதான விமர்சனங்கள் தவிடு பொடியாகி இருக்கிறது. பாஜகவுடன், திமுகவுடன் கூட்டணி இல்லை தனித்துப் போட்டியென விஜய் அறிவித்திருப்பது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க கட்சியில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் நியமனத்தை தீவிர படுத்தியுள்ளார் விஜய். இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் புதிய வரவாக விஜய் வந்திருக்கிறார். நடிகராக இருந்து ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி தற்போது அரசியல் கட்சியாக உருவாக்கி இருக்கிறார். தமிழகம் முழுவதும் 120 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தொடர்ந்து மாநகரம், நகரம், ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனம் எழுந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல அதிரடிகளை அரங்கேற்றி இருக்கிறார்.

பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்தது, கோவையில் பிரம்மாண்டமான பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனை கூட்டம், சிவகங்கை அஜித்குமார் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது என ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்ததாக காஞ்சிபுரம், மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தனியே நடந்து கொண்டிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க நவம்பர் மாத இறுதியில் இருந்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ந்து தேர்தல் நடக்கும் போதும் ஒவ்வொரு தொகுதியிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரையும் குத்தப்பட்டது. அதற்கேற்றார் போல் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தங்கள் கட்சி கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு தீர்மானத்தோடு திமுக பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை. இது இறுதியாக மட்டுமல்ல உறுதியானது என விஜய் கூறினார். இதனால் பாஜகவுடன் இனிமேல் எப்போதும் கூட்டணி இல்லை என அறிவித்திருக்கிறார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் விஜயை சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி முயன்று வரும் நிலையில் விஜயின் இந்த அறிவிப்பு கூட்டணி பேச்சு வார்த்தைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பாஜகவை கழற்றிவிட்டு விஜயை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தமிழக அரசியலில் புதிதாக வந்தாலும் தன்னை சுற்றியே அரசியல் நகர்வுகள் இருப்பதை கண்டு உற்சாகமடைந்திருக்கிறார் விஜய். அதே நேரத்தில் கட்சியில் சில பின்னடைவுகள் இருப்பதும் விஜய் இடம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
தற்போது மாவட்ட செயலாளர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் ஒன்றிய செயலாளர்கள், மாநகர செயலாளர், பகுதி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றவில்லை என விஜய்க்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து வகை அணிகளுக்கும் கட்சிக்கும் புதிய நிர்வாகிகள் நியமனத்தை தீவிர படுத்த பொதுச் செயலாளர் ஆனந்துக்கு உத்தரவிட்டிருக்கிறார் விஜய்.
இது தொடர்பாக ஆனந்தும் மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில் விரைவில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications