12,525 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்... தமிழகம் முழுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கிராம வளர்ச்சி, பிரச்சனைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் குடியரசு தினம்(ஜனவரி 26), தொழிலாளர் தினம்(மே 1), சுதந்திர தினம்(ஆகஸ்ட் 15), மகாத்மா காந்தியின் பிறந்தநாள் (அக்டோபர் 2) ஆகிய நாட்களில் மட்டும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஏப்ரல் 22ல் சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி கூடுதலாக 2 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஆகியவற்றோடு கூடுதலாக உலக தண்ணீர் தினம்(மார்ச் 22), உள்ளாட்சிகள் தினம்(நவம்பர் 1) ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தொழிலாளர் தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், கிராம சபை சபை கூட்டம் பற்றியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
அதன்படி இன்று காலை 10 மணியளவில் தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர். இதுதொடர்பாக விவாதகம் நடத்தப்பட்டது. மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல கிராம சபை கூட்டங்களில் மக்கள் அதிகளவில் கலந்து கொள்ளவில்லை என்பதும், கொரோனா விதிமுறைகள் பின்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications