நன்றி மறக்காத ரவிக்குமார்... ஒரு மாத ஊதியம் ஸ்டாலினிடம் அளிப்பு
Recommended Video
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் தனது ஒரு மாத ஊதியத்தை கலைஞர் அருங்காட்சியம் அமைப்பதற்காக வழங்கியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக அருங்காட்சியம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மு.க.ஸ்டாலினும், அவரது சகோதரி செல்வியும் இணைந்து அதற்காக நிலமெல்லாம் வாங்கி பத்திரப்பதிவு பணிகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு முடித்தனர். இதையடுத்து அங்கு கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தங்கள் ஒரு மாத ஊதியத்தை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் தனது ஒரு மாத ஊதியத்தை கலைஞர் அருங்காட்சியகம் கட்டுமான பணிகளுக்கு நிதியாக அளித்துள்ளார்.
விக்ரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் சென்றார். அங்கு அவரை சந்தித்த ரவிக்குமார் நிதி வழங்கினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டாலின், ரவிக்குமாரின் கரத்தை பற்றி நன்றி கூறியுள்ளார். இதனிடையே நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர் ரவிக்குமார்.
அவரைப்போல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்த சின்ராஜ் உள்ளிட்டோர் கலைஞர் அருங்காட்சியகத்துகாக இதுவரை நிதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் கலைஞர் அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை முடித்து திறக்க திமுக திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications