சித்ராவின் மரணத்திற்கு முன்பு என்னிடம் பேசவில்லை... உண்மை வெளிவரவேண்டும் - மாமனார் பேட்டி
சித்ரா மரண வழக்கில் வெளிப்படையான விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று அவரது மாமனாரும் ஹேமந்தின் அப்பாவுமான ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக உரிய, வெளிப்படையான விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று அவரது மாமனார் கூறியுள்ளார். சரியான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து என் மகன் ஹேமந்தை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவகத்தில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேமந்த் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வரதட்சணை கொடுமை நடைபெற்றதா என்று சித்ராவின் கணவர், மாமனார், மாமியாரிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்றுள்ளது.
அப்போது பேசிய சித்ராவின் மாமனார் சித்ரா தற்கொலை குறித்த விசாரணை ஒரு பக்கமாகவே நடைபெற்று வருகிறது என்று குற்றம் சாட்டினார். அவரது நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை நடைபெற்றதாக தெரியவில்லை, என்னுடைய மகனிடம் 6 நாட்கள் விசாரணை நடத்திய பின்னர், ஆர்டிஓ விசாரணைக்கு முன் அவசர அவசரமாக கைது செய்தார்கள் என்று தெரிவித்தார்.
சித்ராவிற்கு ஏதோ ஒரு வகையில் பெரிய மன அழுத்தம் இருந்துள்ளது. ஏதேனும் பொருளாதார பிரச்சனைகள் சிக்கி உள்ளாரா? அது சம்பந்தமாக யாரேனும் மிரட்டினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சித்ரா மார்பில் காயம், விஐபி மகன்.. டேட்டிங் "வீடியோ" .. அடங்காமல் கிளம்பும் மர்ம மரணத்தின் புரளிகள்
இந்த நிலையில் சித்ராவின் மரணத்தில் வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று ஹேமந்த் தந்தை ரவிச்சந்திரன் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன், சித்ரா இறந்தநாளில் கடைசியாக என்னிடம் பேசியதாக வெளியான தகவல் தவறு என்று தெரிவித்தார்.
சித்ராவின் மரணத்தில் உரிய, வெளிப்படையான விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்த அவர், சரியான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து என் மகன் ஹேமந்தை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.