அக்கா இல்லை... நினைத்துக்கொண்டே வந்து தனியாக வாக்களித்தேன் - சசிகலா கண்ணீர்
உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா இல்லாமல் முதன் முறையாக தனியாக வந்து வாக்களித்தேன் என்று சசிகலா கூறியுள்ளார்.
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா இல்லாமல் முதன் முறையாக தனியாக வந்து வாக்களித்தேன் என்று கண்ணீர் மல்க பேட்டியளித்தார். ஆளும் கட்சி நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும். அராஜகம் செய்யக் கூடாது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்
Recommended Video
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா வாக்களிக்க வந்தார். முதன் முறையாக ஜெயலலிதா இல்லாமல் தனியாக வந்து வாக்களித்தார் சசிகலா.

வாக்களித்த சசிகலா
தி.நகரில் உள்ள வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் சசிகலா தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, ''அக்கா இல்லாமல் முதல் முறையாக வாக்களிக்கிறேன். வரும் போதே நினைத்துக்கொண்டேதான் வந்தேன். நான் என் அக்காவுடன் சேர்ந்துதான் வாக்களித்து இருக்கிறேன். இப்போது தனியாக வந்து வாக்களித்துள்ளேன் என்று கூறி கண் கலங்கினார்.

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஓட்டு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் போயஸ்கார்டனில் இருந்த சசிகலா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களிப்பார். எப்போது வாக்களித்தாலும் ஜெயலலிதா உடன் வந்துதான் வாக்களிப்பார். 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது கடைசியாக ஜெயலலிதாவும் சசிகலாவும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்குகளை பதிவு செய்தனர்.

ஓட்டு நீக்கம்
2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் சசிகலா வாக்களிக்கவில்லை. போயஸ்கார்டனில் உள்ள வேதாநிலையம் அரசுடைமையாக்கப்பட்ட பின்னர் அவரது ஓட்டு நீக்கப்பட்டது. அதேபோல இளவரசி உள்ளிட்ட போயஸ்கார்டன் முகவரியில் இருந்த அனைவரின் வாக்கும் நீக்கப்பட்டதால் கடந்த சட்டசபைத் தேர்தலில் சசிகலாவால் வாக்களிக்க முடியவில்லை.

தனியாக வாக்களித்த சசிகலா
சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சசிகலா, தி.நகரில் வசித்து வருகிறார். இதனையடுத்து இந்த முறை தனியாக தி. நகரில் வந்து வாக்களித்துள்ளார் சசிகலா. அதனால்தான் இது கஷ்டமான சூழல் என்றும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அராஜகம் செய்யக்கூடாது
சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சசிகலா, தி.நகரில் வசித்து வருகிறார். இதனையடுத்து இந்த முறை தனியாக தி. நகரில் வந்து வாக்களித்துள்ளார் சசிகலா. அதனால்தான் இது கஷ்டமான சூழல் என்றும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இது தமிழக அரசு நடத்தும் தேர்தல். நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அதை வைத்து ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்யக்கூடாது தமிழக மக்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும் அவர்கள் நல்ல முடிவாக எடுப்பார்கள் என்றும் சசிகலா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications