அதிமுக அரசு தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்... முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
சென்னை: அதிமுக அரசு தொடர 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு, முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், ஆட்சியை தக்கவைக்க, அதிமுக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதே நேரம், ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 22 தொகுதிகளின் வெற்றியை வைத்து, தமிழகத்தின் அடுத்தக்கட்ட நகர்வை தீர்மாணிக்கும் என்பதால், மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகி உள்ளது.
இந்தநிலையில், முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து துறைகளின் மூலம் மக்கள் நலத்திட்டங்களை அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கூறி சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆட்சி தொடரவும், மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக தனது தந்தையின் மறைவை வைத்து ஸ்டாலின் பொய் தகவல்களை பரப்பி வருவதாகவும், கருணாநிதியின் புகழுக்கு களங்கத்தை விளைவித்துவிட வேண்டாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications