டிரம்ப் பக்கம் தாவிய இந்தியர் ஓட்டுகள்..! கமலாவை கட்டம் கட்டியது ஏன்? ஜெயரஞ்சன் தரமான விளக்கம்
சென்னை: நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு அதிகமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வாக்களித்துள்ளதாகவும் அதனால்தான் அவர் இந்தளவுக்கு வெற்றியைப் பெற்றார் எனவும் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் சில புள்ளிவிவரங்கள் அடிப்படையில் விளக்கியுள்ளார்.
அமெரிக்காவின் 47 அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். ஒரு கட்சி ஆட்சியைப் பெரும்பான்மை பெற 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகள் தேவை. ஆனால், டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி 295 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ட்ரம்ப்பின் கட்சிக்கு 7,26,15,305 வாக்குகள் கிடைத்துள்ளது. அதாவது 50.9%. அதேநேரம் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரில் 226 எலக்ட்ரல் வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்துள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 6,79,19,116 ஆகும்.

இந்தத் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு எந்த மாகாணங்களில் எல்லாம் குறைவாகக் கிடைக்கும் எனக் கருத்துக் கணிப்புகள் சொன்னதோ அங்கே எல்லாம் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. கறுப்பின பெண் கமலா ஹாரிஸை, இந்திய வாக்காளர்களே அதிகம் ஆதரிக்கவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை ஏன் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர்களே ஆதரிக்கவில்லை? அதற்கான காரணம் என்ன? எங்கே வென்றார் டிரம்ப்? அதைப் பற்றி புள்ளிவிவரங்களோடு சில உண்மைகளை எடுத்து வைத்துள்ளார் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும். ஒரு பக்கம் கமலா ஹாரிஸ். மற்றொரு பக்கம் டிரம்ப். இதில் இருவருமே சம பலத்துடன் மோதுவார்கள். எனவே இழுபறி நீடிக்கும் என்று பலரும் சொன்னார்கள். வெற்றியை ஏழு மாகாணங்கள்தான் தீர்மானிக்கும் என்றும் சொன்னார்கள். அப்படிச் சொல்லப்பட்ட அனைத்து மாகாணங்களிலும் டிரம்ப்க்கு ஆதரவு கிடைத்து அவர் வெற்றிபெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கறுப்பின பெண்ணான கமலா ஹாரிஸ் அவரது அரசியல் பயணத்தை கலிஃபோர்னியாவிலிருந்து தொடங்கினார். அதன் பிறகு துணை அதிபராகி, இன்று அதிபர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருக்கிறார். இதற்கு முன்பு முன்னாள் அதிபர் கிளின்டன் மனைவி ஹிலாரி கிளின்டன் இப்படித்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது பலரும் அவர் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்றார்கள். இறுதியில் அவரும் தோல்வியைச் சந்தித்தார்.
இந்த முறை நடந்த தேர்தலில் வெள்ளையர்களில் உள்ள பெரும்பாலான ஆண்கள் டிரம்புக்கு ஆதரவளித்துள்ளதாகவும் கமலாவுக்கு கறுப்பின மற்றும் இந்தியாவிலிருந்து குடியேறிய மகக்ள் ஆதரவளித்ததாகவும் தெரியவந்துள்ளது. புள்ளிவிவரங்கள் கூட இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறி உள்ள வாக்காளர்களில் 70% பேர் எப்போது ஜனநாயகக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள் எனச் சொன்னது.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஃபெட்னா மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். அப்போது அங்கே உள்ள தமிழர்களிடம் கலந்துரையாடிய போது,நிலைமை சில ஆண்டுகளாக மாறிவிட்டது. இந்தியர்கள் பலரும் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ளனர் என்று சொன்னார்கள். டிரம்ப் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலத்திட்டங்களுக்குச் செலவழிக்கப்படும் செலவுகளைக் குறைப்பார்கள். அதனால், இலவசத் திட்டங்கள் என்பது குறையும். ஆகவே, அரசு வரி விதிப்பு சதவீதம் குறைக்கப்படும். செலவு குறைவதால் வரியையும் குறைப்பார்கள். அதனால் மக்கள் பலர் டிரம்ப் வருவதை வரவேற்கிறார்கள் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தனர்.
அமெரிக்காவில் இண்டர்னல் ரெவின்யூ சர்வீஸ் என்ற அமைப்புதான் வரி தொடர்பான தரவுகளை எல்லாம் துல்லியமாக வெளியிடும். அதன் அறிக்கைப்படி பெருவாரியான அமெரிக்கர்களின் மீடியம் வருமானம் எவ்வளவு என்று ஒரு டேட்டாவை வெளியிட்டுள்ளது. இது சராசரி வருமானம் அல்ல. மீடியம் வருமானம். தோராயமான மீடியம் வருமானம் என்பது 73 ஆயிரம் டாலர் என்பது தெரிகிறது. இதே அமெரிக்க வெள்ளையர்களின் ஆண்டு மீடியம் வருமானம் என்பது இதைவிடக் குறைவாகவே கிடைக்கிறது.
ஆனால், இந்தியாவிலிருந்து குடியேறிய இந்தியர்களின் ஆண்டு மீடியம் வருமானம் என்பது 1லட்சத்து 55 ஆயிரம் டாலராக உள்ளது. இது வெள்ளைக்காரர் அமெரிக்கர்களைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்தியர்களுக்கு ஏன் இந்தளவுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது என்றால், அவர்கள் அனைவரும் சிறந்த மேற்படிப்பை முடித்துவிட்டு நல்ல உத்யோகத்தில் அமர்கிறார்கள். ஆகவே, உயர்ந்த வருமான கிடைக்கிறது. இந்த வகுப்பினர் அனைவரும் வரி குறைப்பு கிடைக்கும் என்பதால், டிரம்பை ஆதரிக்கிறார்கள்.
இப்போது ஒரு ஆய்வுக் கட்டுரையை வாசித்தேன். அதில், ஒரு விசயத்தை விளக்கி இருந்தார்கள். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமுறையில் 35 வயது மதிக்கத் தக்கவர்கள் டிரம்புக்கு வாக்களிக்கிறார்கள். அதே வேளையில் அமெரிக்க ஹாலிவுட் நடிகர்கள், தொழிலதிபர்கள் பலர் கமலா ஹாரிசின் ஜனநாயகக் கட்சியை ஆதரித்ததன் விளைவுதான் டிரம்புக்கு இந்தளவுக்கு ஆதரவு பெருகியுள்ளது.
அமெரிக்க வெள்ளை இனத்தவர்கள் டிரம்பை ஒரு காப்பாளனாக நினைக்கிறார்கள். கூலிகளாக இருக்கும் வெள்ளையர்களுக்குப் போகவேண்டிய வேலை வாய்ப்பை சட்டவிரோத குடியேற்றத்தின் மூலம் நாட்டின் உள்ளே வந்தவர்கள் தட்டிப் பறிக்கிறார்கள். அதைத் தடுக்க டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்துவார். கடுமையான நடவடிக்கை எடுப்பார். அதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் நம்புவதால் டிரம்பை ஆதரிக்கிறார்கள்.
ஆசிய மக்கள் மீது டிரம்ப்க்கு அதிக கோபம் இருக்கிறது. அவர் தங்கள் நாட்டு மக்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கிறார்கள் என்ற கருத்தை ஆதரிக்கிறார். எனவே எதிர்க்கிறார். எனவே வெள்ளையர்கள் ஒரு கறுப்பின பெண்ணை அதிபராக ஏற்க தயாராக இல்லை. ஆகவே,தான் டிரம்ப் எங்கே எல்லாம் தோல்வியை தழுவுவார் எனக் கணித்தார்களோ அந்த மாகாணத்தில் எல்லாம் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் உலக அரசியலில் நிச்சயம் ஒரு பாதிப்பு இருக்கும். அது என்ன மாதிரியான பாதிப்பு என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார்.












Click it and Unblock the Notifications