"பெரு வெளிச்சம்".. இரவு முழுக்க மழை பெய்தும்.. சென்னையில் சட்டென வடிந்த தண்ணீர்.. செம மாற்றம்!
சென்னை: சென்னையில் நேற்று இரவு முழுக்க பல இடங்களில் மழை பெய்தும் சாலைகளில் பெரிதாக வெள்ளம் தேங்காமல் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. தண்ணீர் வேகமாக வடிந்தது மக்கள் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று மாலையில் இருந்தே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது.
சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது.

மழை
சென்னையில் இவ்வளவு மழை பெய்தும் பல இடங்களில் தண்ணீர் தேங்கவே இல்லை என்று பல்வேறு பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். அதன்படி பொதுவாக மழை பெய்தால் 2 - 3 மணி நேரம் தண்ணீர் தேங்கும் சாலைகளில் உடனே மழை நீர் வடிந்துவிட்டது. தி நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலையை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் நினைத்ததை விட வேகமாக வடிந்துவிட்டது என்று மக்கள் தெரிவித்து உள்ளனர். பொதுவாக தண்ணீர் அதிக நேரம் தேங்கி இருக்கும்.

தண்ணீர் இல்லை
ஆனால் இந்த முறை அப்படி அல்ல. அதிகபட்சம் 15 நிமிடத்தில் தேங்கிய தண்ணீர் எல்லாம் வடிந்துவிட்டது. இரவு முழுக்க மழை பெய்தும் கூட அதிக அளவு தண்ணீர் தேங்கவில்லை. மழை நீர் வடிகால் வசதி காரணமாக இப்படி தண்ணீர் வேகமாக வடிகிறது. முழுவதாக இந்த பணிகள் முடிந்தால் தண்ணீர் இன்னும் வேகமாக வடியும் என்று நம்புகிறோம் என்று தி நகர், கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்து உள்ளனர்.

பருவமழை
வரும் நாட்களில் இன்னும் பருவமழை தொடங்கியதும் இன்னும் தீவிரமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் எப்போதும் மழை பெய்தால் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பலன் அளிக்க தொடங்கி உள்ளது.

குழிகள்
இதற்காக சென்னையில் எல்லா சாலைகளிலும் குழி தோண்டப்பட்டு உள்ளது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வருகின்றனர். பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். பருவமழை நெருங்கி வருவதால் இந்த பணிகள் வேகமாக செய்யப்பட்டு வருகின்றன., இன்னும் பல ஏரியாக்களில் பணிகள் முழுமையாக முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக கே.கே நகர் போன்ற பகுதிகளில் இன்னும் பணிகள் முடியாமல் உள்ளன.

கேகே நகர்
இதனால் சில பகுதிகளில் மட்டும் நேற்று மழை காரணமாக தண்ணீர் தேங்கியது. உதாரணமாக கேகே நகரில் இன்று காலை சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனால் ஒரு பக்கம் ஏற்கனவே கால்வாய் அமைக்கும் பணிகள் முடிந்த காரணத்தால், ஒரு பக்கம் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கும் உடனடியாக அதிகாரிகள் வந்து நீரை வெளியேற்றும் பணிகளை செய்து வருகின்றனர்.

நம்பிக்கை
சென்னையில் சில இடங்களில் 95 சதவிகிதம் வரை பணிகள் முடிவடைந்து உள்ளன. கடந்த வாரம்தான் மழை பெய்த போது சென்னையில் வடிகால் வசதிகள் சோதனை செய்யப்பட்டது. மழை நீர் எப்படி வெளியேறுகிறது என்பது சோதனை செய்யப்பட்டது. வெள்ள நீர் வடிகால் வசதி சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து அதை வீடியோவாக எடுத்து அனுப்பும்படி தலைமை செயலாளரும் மாநகர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். தற்போது இந்த பணிகள் காரணமாக தண்ணீர் வேகமாக வெளியூரா தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications