எடப்பாடி தரப்பினர் பற்றிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கொடுத்ததே நாங்கதான்: கோவை செல்வராஜ் பரபர
சென்னை: அதிமுக மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்களை குறிவைத்து அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், இதன் பின்னணி இப்போது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்திலேயே அப்போதைய அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது திமுக அடுக்கடுக்கான ஊழல் புகார்களை முன் வைத்தது.
ஊழல் செய்து முறைகேடாகப் பணத்தைச் சம்பாதித்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகவே கொடுத்தது திமுக.

ரெய்டு
அதன்படி திமுக ஆட்சி அமைந்ததும், கொரோனா குறைந்த உடன் மடமடவென முக்கியமான மாஜி அமைச்சர்கள் பலர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. முதலில் அதிமுகவின் மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் தொடங்கப்பட்ட இந்த ரெய்டு வரிசையாக எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர் எனப் பலரையும் குறி வைத்து நீண்டது.

மீண்டும் ரெய்டு
இந்த ரெய்டு நடவடிக்கைகள் சற்று ஓய்ந்து இருந்த நிலையில் மீண்டும் சில வாரங்களாகச் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் கடந்த டிசம்பர் மாதமே ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் ஜூலை மாதம் இறுதியில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். புதிதாகக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காமராஜ்
இந்த ரெய்டிற்கு சில வாரங்கள் முன்னாள் தான் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தினர். கடந்த 10 வருடத்தில் வருமானத்திற்கு அதிகமாக 58,44,38,252 ரூபாய் சொத்து சேர்த்ததாக காமராஜ் மீது புகார் வைக்கப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏ
இதுநாள் வரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் மட்டுமே ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதி நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. இதுவரை முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் மட்டும் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது அதுவே முதல்முறையாகும்.

எடப்பாடி ஆதரவாளர்கள்
அதேபோல சமீபத்தில் தான் முன்னாள் அமைச்சரும் அதிமுகவில் பவுர்புல் தலைவராகக் கருதப்படும் வேலுமணிக்கு நெருங்கி நட்பு கொண்ட தொழிலதிபர் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இப்படி அதிமுகவில் முக்கிய நபர்களைக் குறி வைத்து அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. அதிலும் இவர்கள் அனைவரும் இப்போது பிரிந்து கிடக்கும் அதிமுகவில் எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஆவர்.

என்ன காரணம்
இப்படி எடப்பாடி ஆதரவாளர்கள் மீது அடுத்தடுத்து அரங்கேறும் இந்த அதிரடி ரெய்டிற்கு என்ன காரணம் எனப் புரியாமல் அதிமுக நிர்வாகிகள் குழம்பி இருந்தனர். இந்நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் தாக்கி பேசிய அவர், கோடநாடு வீட்டிற்கே காவல் போடாதவர் எடப்பாடி எனச் சாடினார்.

உடைத்த கோவை செல்வராஜ்
மேலும், கடந்த 4.5 ஆண்டுகளில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் செய்த ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவோம் எனக் குறிப்பிட்ட அவர், நாங்கள் கொடுத்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர் எனக் கூறி அதிரச் செய்தார். மேலும், வெகு சீக்கிரம் மற்றவர்கள் மீதான ஊழல் பட்டியலையும் வெளியிடுவோம் என்றும் பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். வரும் நாட்களில் இந்த விவகாரத்தில் மேலும் பல திடுக் தகவல்கள் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications