லட்சம் லட்சமா வாங்கினாங்க.. ஒரே கையெழுத்தில் தடுத்தோம்.. அமைச்சர் அருண்ராஜ் பெருமிதம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். லட்சம் லட்சமாக ஊழல் வாங்கி கொண்டிருந்த ஊழலை, ஒரே கையெழுத்தில் தவெக தடுத்து நிறுத்தியுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை தவெக நிகழ்ச்சியில் அமைச்சசர் அருண்ராஜ் பேசுகையில், "தனியார் பள்ளிகளில் உரிமம் புதுப்பிப்பதற்கு லட்சம் லட்சமாக லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தனர். இந்த நடைமுறை இனி ஆன்லைன் மூலம் வெளிப்படையாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். ஒரே கையெழுத்தில் அவர்கள் செய்து கொண்டிருந்த அனைத்து ஊழல்களும் முடிவுக்கு வந்துவிட்டது. இதுதான் நம் தலைமை. தலைமை எவ்வழியோ அதேபோல தான் அனைத்து அமைச்சர்களும்.

துணிச்சல் இருக்கா
ஒரு ரூபாய் லஞ்சம் வாங்க மாட்டோம். வாங்குபவர்களையும் விடமாட்டோம் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். கடந்த ஆட்சியில் கவரில் காசு வைத்து கொடுத்தால் தான் அது கவர்ன்மென்ட் என்கிற அளவுக்கு ஊழல் இருந்தது. இந்தியன் தாத்தா போல, ஒரு தமிழன் நம் தமிழ்நாட்டில் ஊழலை ஒழித்துள்ளார். இது எவ்வளவு பெரிய விஷயம். முதல் அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் பல விஷயங்களை பேசினார்.
எனக்கு உங்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. மக்கள் இந்தளவுக்கு அன்பு செலுத்தி ஆட்சியமைத்து கொடுத்துள்ளனர் என்றால், அதைவிட அதிக எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. அதை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார். இதுவரை எந்த முதலமைச்சராவது அமைச்சர்களை பார்த்து லஞ்சம் வாங்க கூடாது என்று சொல்லியிருக்கிறார்களா. அந்த துணிச்சல் யாருக்காவது இருக்கிறதா. லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்ல சொல்லியிருக்கிறார்.
இதயத்தில் அமர்ந்து
இவரை போல எந்த முதலமைச்சர் சொன்னார்கள். ஓட்டுக்கு ஒரு பைசா காசு கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். அதனால் தான் இது சாத்தியமாகியுள்ளது. இதுதான் உண்மையான ஜனநாயக புரட்சி. ஊழலற்ற நிர்வாகத்தை தமிழகம் பார்த்ததில்லை. இப்போதுதான் பார்க்க தொடங்கியுள்ளோம். அரசு கோடிக்கணக்கில் எவ்வளளோ திட்டங்களை செய்கிறது. ஆனாலும் தமிழகம் முழுமையாக வளர்ச்சியடைவில்லை. அதற்கு ஊழல் தான் காரணம்.
இந்த 5 வருடங்கள் தமிழகம் எப்படி வளர்ச்சியடைய போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஒவ்வொரு துறையிலும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. பத்திரப்பதிவு துறையில் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளும் முறை கொண்டு வந்துள்ளோம். போக்குவரத்து, டாஸ்மாக் என ஒவ்வொரு துறையிலும் ஊழலை ஒழித்து கொண்டிருக்கிறோம். மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்கிறோம். மக்களின் இதயத்தில் அமர்ந்து அவர்களின் குறைகளை போக்குபவர் தான் உண்மையான தலைவர். அது நம் முதலமைச்சர் தான்" என்றார்.












Click it and Unblock the Notifications