பொதுக்கூட்டத்தில் ஆலோசித்த பின் கூட்டணி குறித்து தெரிவிப்போம் - பாமக நிறுவனர் ராமதாஸ்
மயிலாடுதுறை: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இதில் பேசிய ராமதாஸ், பொதுக் கூட்டத்தில் கலந்தாலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டணி குறித்து தெரிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. பறை, தவில் இசை நிகழ்ச்சி, பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. மாநாட்டின்போது கனமழை கொட்டித் தீர்த்தது. மாநாட்டு மேடையைச் சுற்றி மழைநீர் சூழ்ந்த நிலையில் மழைநீரை வெளியேற்றும் பணியில் பாமக தொண்டர்கள் ஈடுபட்டனர்.

மாநாட்டில், தமிழக பூரண மதுவிலக்கு, பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது, பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பது, மது, போதைப் பொருட்களால் ஏற்படும் சீரழிவிலிருந்து பாதுகாப்பது போன்ற முக்கிய நோக்கங்களைக் கொண்டு மாநாடு நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார். இந்த மாநாட்டில், பெண்களுக்கு வேலைவாய்ப்பில்லா திண்டாட்டம் நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்.
முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரில் மன வேதனைக்கு உள்ளாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பள்ளிகளில் நடைபெறும் பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு பெண் காவலர்கள் நியமிக்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய பெண்களின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேலை நாட்களின் எண்ணிக்கையையும், தினக் கூலியையும் அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதைத்தொடர்ந்து, மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில், எனது நண்பர் கலைஞர் கருணாநிதி 20% ஒதுக்கீட்டை அளித்தார். தற்போது, அண்டை மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இன்னும் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதல்வருக்கு என்ன தயக்கம்?.
10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது. உள் ஒதுக்கீடு கேட்டு 7 நாள்கள் போராட்டம் நடத்தினால் என்ன ஆகும் தமிழ்நாடு.
யார் என்ன சொன்னாலும் அதனை காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன். நான் சொல்வதுதான் நடக்கும். வரும் 17 ஆம் தேதி நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்தாலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டணி குறித்து தெரிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications