விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு பற்றிய கேள்வி.. டக்கென எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதில்
சென்னை: இன்று அதிமுகவில் இறுதிக்கட்ட வேட்பாளர்களை அறிவித்த எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது பற்றி செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன் தினமே தொடங்கியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் களம் அனல் பறக்கிறது. திமுக நேற்று தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதேபோல் அதிமுகவும் நேற்று முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இறுதிகட்ட வேட்பாளரை அறிவித்தார். இன்று மொத்தம் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் மூலம் வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக மொத்தம் 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை: தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அப்போது, இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து கூறியதாவது:-
அதிமுகவிற்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. எம் ஜி ஆர் இந்த இயக்கத்தை தோற்றுவித்த போது எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தார் என்று எல்லோருக்கும் தெரியும். அவருடைய மறைவுக்கு பிறகு ஜெயலலிதா இந்த இயக்கத்தை நடத்தியபோது எவ்வளவு பெரிய பிரச்சினைகளை சந்தித்தார் என்று தெரியும். இருவரும் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து தான் வெற்றி பெற்றனர்.
சட்டரீதியாக எதிர்கொள்வோம்: இதேபோல் நாங்களும் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அந்த வெற்றியை பெறுவோம். நாங்கள் சட்ட ரீதியாக அனைத்தையும் சந்திப்போம். ஏற்கனவே மாநில அரசு லஞ்ச ஒழிப்பு துறை மூலமாக வழக்கு பதிவு செய்தார்கள்.. மத்திய அரசு வருமான வரித்துறை மூலமாக ரெய்டு நடத்தினார்கள். இப்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருக்கிறார்கள்.. எல்லாவற்றையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
பெண்கள் விருப்பப்பட்டு கேட்டால் தொகுதிகளை வழங்குவோம். திருநெல்வேலியில் ஒதுக்கியிருக்கோம். மத ரீதியாக நடத்துகிற கட்சி கிடையாது. மதச்சார்பற்ற நாட்டில் எல்லா மதமும் சமம். அதிமுக சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications