கை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்..ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் எய்த சரமாரி அம்புகள்
சென்னை: தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என்று, பதவியேற்ற நாளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் செயல்கள் வெளிப்படுத்தி வருகிறது என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டு சட்டசபையை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதிக்கிறார். சட்டசபைக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனை கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் 2வது முறையாக ஆளுநர் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும், அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என்று, பதவியேற்ற நாளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் செயல்கள் வெளிப்படுத்தி வருகிறது என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார்.

ஆளுநர் திறந்த மனதுடன் அரசுடன் விவாதிக்க வேண்டும் பொது வெளியில் விவாதிக்க கூடாது. ஆளுநர் என்ற நிலையைத் தாண்டி அரசியல்வாதியாக பேசுகிறார். குறிப்பாக பிரதமர் வரும் போதே, நான் டெல்லிக்கு செல்லும் போதோ தமிழ்நாட்டு அரசுக்கு எதிராக ஆளுநர் பேசுகிறார். ஆளுநர் விதண்டாவதமாக பேசுகிறார். அரசியல் சட்டப்பிரிவின் 200ன் கீழ் ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட மசோதாவை மீண்டும் திருப்பி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார் அவை முன்னவர் துரைமுருகன். அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்காக பேரவை கதவுகள் அடைக்கப்பட்டன. ஒவ்வொரு உறுப்பினர் பெயரையும் குறிப்பிட்டு எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. 2017ம் ஆண்டுக்கு பிறகு சட்டப்பேரவையில் பகுதி வாரியாக எண்ணி கணிக்கும் வகையில் வாக்கெடுப்பு நடந்தது.

வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய பாஜக அனுமதி கோரியது. பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் பேரவைக்கு வரவில்லை. தீர்மானத்திற்கு பாஜக உறுப்பினர்கள் எம்ஆர் காந்தி, சரஸ்வதி ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர். தொடர்ந்து, ஆளுருக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், அவையில் இருந்த 146 உறுப்பினர்களில் 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். தீர்மானத்தை ஆதரிப்போர் எண்ணிக்கை 4ல் 3 பங்குக்கு மேல் உள்ளதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தொடர்ந்து தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications