தமிழகத்தில் பிரசாரத்தை முடிக்காத "வெயில்".. 10 மாவட்டங்களில் இன்று "சதம்".. வானியல் மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும், பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை இன்றும் தாண்டும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மண்டையை பிளந்து கொண்டு இருக்கிறது. கோடை காலம் தொடங்கி சில நாட்களே ஆகியுள்ளது. இன்னும் அக்னி நட்சத்திரம் கூட தொடங்கவில்லை.ஆனாலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று 10 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து சதம் அடித்துள்ளது. தர்மபுரி, திருப்பத்தூர்,வேலூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டியது.
இந்த நிலையில் இன்றும் இந்த 10 மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும். கூடவே அனல் காற்றும் வீசும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
முக்கியமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் 6 டிகிரி செல்ஸியஸ் வரை வெயில் அதிகரிக்கும். இதனால் தர்மபுரி, திருப்பத்தூர்,வேலூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.