மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டதா?.. குறும்படம் வெளியிட்ட காவல்துறை
சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தின் மீது கற்கள்,கட்டைகள் கொண்டு தாக்கப்பட்டதாக ராஜ்பவன் புகார் அளித்த நிலையில் இது பொய்யான தகவல் என்று காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்ப்பட்டுள்ளது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
ஆளுநர் மாளிகை முன்பு ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியது பற்றி எரிகிறது. இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க மயிலாடுதுறையில் நடந்த சம்பவத்தையும் குறிப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது ராஜ்பவன். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மூலம் ஆளுநருக்கு தொடர் அச்சுறுத்தல் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்திற்கு ஆளுநர் சென்ற போது கான்வாய் தாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் ஆளுநர் மாளிகை அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஆளுநர் ரவி மயிலாடுதுறை சென்றபோது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த டிஜிபி சங்கர் ஜிவால் சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றினை வெளியிட்டார். ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்றபின்னர் அங்குகூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர். அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள டிஜிபி சங்கர் ஜிவால், இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் அனைத்துக்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன. மேலும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.மேலே குறிப்பிட்டுள்ளதுபோல எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
ஆளுநர் மாளிகையின் பாதுகாப்புக்காக சர்தார்படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன்இருந்த காரணத்தாலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாலும், உடனடியாககுற்றவாளி கைது செய்யப்பட்டார்.
மேற்படி வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும். ஆளுநருக்கும் மற்றும் அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications