தொகுதி மறுசீரமைப்பு.. உ.பி-க்கு +63.. தமிழகத்திற்கு -8.. தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கை ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் எந்த மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படும், எந்த மாநிலங்களுக்கு ஆதாயம் ஏற்படும் என்பதை பார்க்கலாம். அதேபோல் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எந்த மாநிலத்திற்கு அதிக ஆதாயம் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

யாருக்கு லாபம்?
அதேபோல் ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளார். சென்னையில் நடக்கும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் தேசிய அளவில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தென் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகள் என்ன, வடமாநிலங்களுக்கு கிடைக்கும் ஆதாயம் என்ன என்பதை பார்க்கலாம்.
வடமாநிலங்களுக்கு அதிகரிப்பு
அதன்படி தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்று தொகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்தால் வட மாநிலங்களுக்கு எதிர்பார்க்க முடியாத அளவிற்கு தொகுதிகள் உயரும். உத்தரப் பிரதேசத்தில் தற்போதுள்ள 80 தொகுதிகளின் எண்ணிக்கை 143ஆக உயரும். அதேபோல் பீகாரில் உள்ள 40 தொகுதிகளின் எண்ணிக்கை 79ஆகவும், ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளின் எண்ணிக்கை 40ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளின் எண்ணிக்கை 52ஆகவும் உயரும்.
தென் மாநிலங்களுக்கு பாதிப்பு
அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் எண்ணிக்கை 49ஆகவும், ஆந்திரா - தெலங்கானாவில் உள்ள 42 தொகுதிகளின் எண்ணிக்கை 54ஆகவும், கேரளாவின் 20 தொகுதிகள் எண்ணிக்கை 20ஆகவே தொடரும். கர்நாடகாவின் 28 தொகுதிகளின் எண்ணிக்கை 41ஆகவும் அதிகரிக்கப்படும். அதாவது வடமாநிலங்களுக்கு சுமார் 150 தொகுதிகளும், தென் மாநிலங்களுக்கு 35 தொகுதிகள் மட்டுமே அதிகரிக்கும். இதனால் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களுக்கான அரசியல் அதிகாரம் குறைந்துவிடும்.
ஆதாயம் யாருக்கு?
ஒருவேளை லோக் சபாவின் 543 எம்பி-க்கள் எண்ணிக்கையை மாற்றாமல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால், உத்தரப் பிரதேசத்தின் தொகுதி எண்ணிக்கை 80ல் இருந்து 91ஆக அதிகரிக்கும். அதேபோல் பீகார் தொகுதி எண்ணிக்கை 40ல் இருந்து 50ஆகவும், ராஜஸ்தான் தொகுதி எண்ணிக்கை 25ல் இருந்து 31ஆகவும், மத்தியப் பிரதேசத்தின் தொகுதி எண்ணிக்கை 29ல் இருந்து 33ஆகவும் அதிகரிக்கும்.
தென்னிந்தியாவுக்கு அபாயம்
இந்த வகையில் தென் மாநிலங்களான ஆந்திரா - தெலங்கானாவின் தொகுதி எண்ணிக்கை 42ல் இருந்து 34ஆக குறையும். அதேபோல் கேரளாவின் தொகுதி எண்ணிக்கை 20ல் இருந்து 12ஆகவும், கர்நாடகாவின் தொகுதி எண்ணிக்கை 28ல் இருந்து 26ஆகவும், தமிழ்நாட்டின் தொகுதி எண்ணிக்கை 39ல் இருந்து 31ஆகவும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications