பாஜக? அதிமுக? பாமகவின் கூட்டணி முடிவு என்ன? மீண்டும் கூட்டம் போடும் ராமதாஸ்.. ஜிகே மணி தகவல்!
சென்னை: பாமகவை பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க அணுகியுள்ளன. தேர்தல் கூட்டணி குறித்து தற்போது வரை பாமக எந்த முடிவும் எடுக்கவில்லை என பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மற்றொரு புறம் அதிமுக தங்களது கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வருகிறது. எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள அதிமுக, பாமக, தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க பிரயத்தனம் செய்து வருகிறது. அதேசமயம் பாஜகவும், பாமக, தேமுதிக, தமாக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் 7 தொகுதிகளில் பா.ம.க போட்டியிட்டது. ஆனால், ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. அதில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது பாமக. இதைத்தொடர்ந்து, இந்த முறை லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பாமக தீர்மானித்தது.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
பாமகவிற்கு கடந்த முறை ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போல் 7 மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த எண்ணிக்கை உறுதியாகிவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன. எனினும், பாமகவோ, அதிமுகவோ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தொடர்ந்து, பாஜக உடனும் பாமக பேசி வருவதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்ச்சர் பதவியை பெறும் நோக்கில் பாஜக கூட்டணியை அன்புமணி ராமதாஸ் விரும்புவதாக கூறப்படுகிறது. எனினும், பாஜக அதற்கு உறுதி அளிக்கவில்லையாம். அப்படியென்றால், தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என பாஜக கூறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கூட்டணி உடன்பாட்டில் சிக்கல் நிலவி வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜிகே மணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "பாமகவை பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க அணுகியுள்ளன. தேர்தல் கூட்டணி குறித்து தற்போது வரை பாமக எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் வாரத்தில் நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தித்திற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். மாவட்டச் செயலாளர்கள் கருத்து அறிந்த பிறகு கூட்டணி பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் இறுதி முடிவை எடுப்பார்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications