'டாஸ்மாக்கை எப்படி நடத்தனும்னு'.. ஒரே வரியில் பதில் சொன்ன சென்னை ஹைகோர்ட்.. பரபரப்பு வழக்கு
சென்னை: டாஸ்மாக் மதுபான வணிகத்தை எப்படி நடத்துவது என்பது அரசுக்கு தெரியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ஆர்.பூமிராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சமீபத்தில் தஞ்சாவூரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திய 2 பேர் பரிதாபமாக இறந்து விட்டதாகவும், இதேபோல கள்ளச்சாராயம் அருந்தி விழுப்புரத்திலும், மதுராந்தகத்திலும் சுமார் 22 பேர் உயிரிழந்து விட்டதை குறிப்பிட்டுள்ளார்.

டாஸ்மாக் மதுபானக்கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்க மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பார்களில் மதுபானங்களை விற்கவோ, சேமித்து வைக்கவோ சட்ட ரீதியாக அனுமதியளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழகத்தில் உள்ள பல டாஸ்மாக் பார்களிளும் போலீஸார் மற்றும் கலால்துறை அதிகாரிகளின் துணையுடன் 24 மணி நேரமும் தடையின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும்,
எனவே டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் மூலமாக விற்கப்படும் மதுபான வகைகள் உண்மையிலேயே தரமானவையா, அதில் எத்தனை சதவீதம் எத்தில் ஆல்கஹால் உள்ளது மற்றும் அந்த மதுபான வகை அருந்த உகந்ததா என்பதை உறுதி செய்யும் வரை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுபானங்களை விற்க தடை விதி்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். மதுபானங்களை, அருகில் உள்ள பார்களில் வைத்து விற்க நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும், எனவும் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி, லக்சுமிநாரயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பத்திரிகை செய்தி அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். மேலும் டாஸ்மாக் வணிகத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து அரசுக்கு தெரியும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications