திமுக தேர்தல் அறிக்கை 181-311 சொல்வது என்ன? நிதிச் சிக்கலை ஆசிரியர்களுக்கு புரிய வைத்த அரசு!
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 2 முக்கிய அறிவிப்புகளை உடனடியாக நிறைவேற்றுவதில் உள்ள நிதிச் சிக்கல்கள் பற்றி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு அதிகாரிகள் புரிய வைத்ததை அடுத்து, அரசின் உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் விடாப்பிடியாக நின்ற சூழலில், அது தொடர்பாக திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இங்கே பார்க்கலாம்.

*''ரூ.8000/- அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க. ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அத்தகைய 20,000 ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கழக ஆட்சி, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்கும். ஆசிரியர் பணிக்காலத்தில் உயர்கல்வி கற்று பட்டம் பெறும் ஆசிரியர்களுக்கு கழக ஆட்சியில் அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்து வழங்கி வந்த ஊக்கத்தொகை அ.தி.மு.க அரசினால் நீக்கப்பட்டுவிட்டது. இந்த ஊக்கத்தொகை மீண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.''
*''பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது 17B பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு, மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்குப் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும்.''
* ''பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.'' மேற்கண்ட இந்த உறுதிகள் தான் 2021 திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளவைகள் ஆகும்.
சொன்னீர்களே செய்தீர்களா என்ற கேள்வியுடன் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கேள்வி எழுப்பி வந்தனர். இது தான் அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கியது. இருப்பினும் முடிந்த வரை அரசின் நிதி ஆதாரம் பற்றி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல மூன்று மாத காலத்தில் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியும் தரப்பட்டதால், இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications