சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் ட்விஸ்ட்.. விடிய விடிய நடந்த விசாரணையில் திடுக் தகவல்
சென்னை: வங்கியில் பணிபுரிந்த ஊழியரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது போலீஸாருக்கு தெரியவந்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ளது ஃபெடரல் வங்கி. அங்கு நேற்றைய தினம் நகைப் பிரிவில் ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். இங்கு பொதுமக்களும் வங்கி சார்ந்த பணிகளுக்காக வருவதும் போவதுமாக இருந்தனர்.
அப்போது பட்டப்பகலில் மர்மநபர்கள் சிலர் புகுந்தனர். அங்கிருந்த ஊழியர்களை கத்திமுனையில் கட்டிப்போட்ட மர்மநபர்கள்,ரூ 11 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

விசாரணை
இது குறித்து தகவலின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

விடிய விடிய விசாரணை
இந்த நிலையில் நேற்று முதல் விடியவிடிய நடத்தப்பட்ட விசாரணையில் வங்கி ஊழியர் முருகன் என்பவர்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. வங்கி காவலாளிக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்து இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிகிறது. முருகன் இன்னும் இருவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பிருந்தது தெரியவந்துள்ளது.

6 பேரிடம் விடிய விடிய விசாரணை
முருகனின் தாய், சகோதரி, உறவினர்கள் உள்பட 6 பேரிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தி வந்தனர். சென்னை பாடியை சேர்ந்த முருகன், ஃபெடரல் வங்கியில் 2 ஆண்டுகளாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் பணிக்கு வந்த முருகன், தனது இரு நண்பர்களை போன் செய்து வரவழைத்துள்ளார்.

இரு ஊழியர்கள்
அலுவலகத்தின் கீழ் தளத்தில் இரண்டு ஊழியர்களையும் மேல் தளத்தில் பாதுகாவலரையும் அடைத்து வைத்துள்ளனர். முதலில் வங்கி காவலாளி சரவணன் என்பவருக்கு மயக்கம் மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்திருக்கிறார். காவலாளி வேண்டாம் என சொல்லியும் வற்புறுத்தி முருகன் கொடுத்ததாக தெரிகிறது. குளிர்பானத்தை குடித்த காவலாளி சிறிது நேரத்தில் மயங்கியதும் கை, கால்களை கட்டி பாத்ரூமில் அடைத்து வைத்துள்ளார்.

தனிப்படை
பின்னர் வங்கி மேனேஜர் சுரேஷ் மற்றும் ஊழியர் விஜயலட்சுமியை கத்தியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டி பாத்ரூமில் அடைத்து வைத்துள்ளார். பின்னர் நகைகளை முழுவதும் கொள்ளையடித்த பிறகு மேலாளர் சுரேஷ் மற்றும் பெண் ஊழியர் விஜயலட்சுமியை ஸ்ட்ராங் ரூமில் பூட்டி வைத்துவிட்டு தனது நண்பர்களுடன் தப்பிவிட்டார். முருகன் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications