சென்னை பப் உள்ளே நடந்தது என்ன.. பெண்கள் வெளியே வரும் முன் என்ன ஆனது? உண்மையே வேறாமே.. பெரிய ட்விஸ்ட்
சென்னை: சென்னையில் உள்ள பிரபல பார் ஒன்றில் சமீபத்தில் பெண்கள் வெளியேறியதை ஊடகங்கள் பல மோசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு இருந்தன.
மிக மிக தவறான கண்ணோட்டத்தில் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டு செய்திகளாக வெளியிடப்பட்டன. முக்கியமாக குறிப்பிட்ட சில ஊடகங்கள் பெண்களின் அங்கங்களை குறி வைத்து மீண்டும் மீண்டும் காட்சிகளை வெளியிட்டன. இரவு நேரம் கடந்து இயங்கிய பப்.. பெண்கள் ஆட்டம் என்றெல்லாம் தவறான தலைப்புகள் போட்டு செய்திகள் வெளியிட்டன.

ஏதோ பெண்கள் மட்டும் அங்கே தவறு செய்தது போல.. பெண்களை கடுமையாக சித்தரித்து செய்திகள் வெளியிட்டன. நைட் லைப் கொண்டாட்டங்களில் பெங்களூர், மும்பை, ஹைதராபாத் எல்லாம் வேறு லெவலில் இருக்கும் போது.. தமிழ்நாடு அரசு இதற்காக கொள்கைகளை மாற்ற முயன்று கொண்டு இருக்கும் போது.. எல்லாத்தையும் அடித்து நொறுக்கும் விதமாக இந்த செய்திகள் வெளியிடப்பட்டன.
வந்த செய்திகள் என்ன?: ஊடகங்களில் வந்த செய்திகள்படி.. இந்த பப் அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி இயங்கி இருக்கிறது. அந்த பப் உள்ளே பெண்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் இருந்தனர். அங்கே 11 மணிக்கு மேல் மது கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதான் அங்கே போலீஸ் நுழையவும், உள்ளே பப் நிர்வாகிகளை கைது செய்யவும் காரணம் என்று கூறப்பட்டது.
உண்மை என்ன?: ஆனால் உண்மையில் நடந்தது இது இல்லை என்று தி நியூஸ் மினிட் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. அவர்கள் வெளியிட்ட செய்தியில்.. அங்கே 11 மணி நெருங்கும் நேரத்தில் 5 -6 ஆண்கள் உள்ளே நுழைய முயன்று உள்ளனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
பப் மூடப்போகிறது என்பதாலும் , பப் உள்ளே செல்ல ஷூ அணிய வேண்டும் என்பதாலும் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர்களை பவுன்சர்கள் தடுத்துள்ளனர். இந்த நிலையில் வெளியே அமர்ந்த அந்த ஆண்கள் குழு.. பப் உள்ளே இருந்து யார் வெளியே வந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று வம்பு செய்துள்ளனர் . அதோடு அங்கேயே அமர்ந்து பப் நிர்வாகிகளை பார்த்து உள்ளனர்.
இந்த நிலையில் அங்கே பிரபல தனியார் ஊடக செய்தியாளர் ஒருவர் வந்துள்ளார். அவரும் உள்ளே நுழைய முயன்றுள்ளார். அவரை தடுக்க முயன்ற போது மற்ற ஆண்களும் இந்த செய்தியாளருடன் சேர்ந்து கொண்டு உள்ளே நுழைய முயன்று மோதலில் ஈடுபட்டு உள்ளனர். கிட்டத்தட்ட அங்கே கைகலப்பு ஏற்படுவது போல மோதல் ஏற்பட்டு உள்ளது.
இது பெரிய மோதலாக வெடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் சரியாக சொல்லி வைத்தது போல.. யாரோ சொல்லி அழைத்தது போல மற்ற மீடியாக்கள் சில வந்துள்ளன. இது எல்லாம் அந்த ஆண்கள் செய்த பழிவாங்கும் நடவடிக்கை போல இருந்ததாக கூறப்பட்டு உள்ளது. அதோடு இல்லாமல் அந்த தனியார் ஊடக செய்தியாளர்.. தான் கிரைம் செய்தி பார்க்க சென்றதாகவும்.. ஒரு டிப் கிடைத்து அங்கே வந்ததாகவும் கூறியுள்ளார், என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மொத்தத்தில் அந்த ஆண்கள் குழு தாங்கள் உள்ளே அனுமதிக்கப்படாத காரணத்தால் உள்ளே இருக்கும் பெண்களை எல்லாம் சேர்த்து அசிங்கப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இப்படி செய்து இருக்கலாம்.. உள்ளே தவறு நடப்பதாக பொய்யான தகவல் பரப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications