மகாபலிபுரம் கடற்கரையில் கர்நாடகா மாநில ஆதிபராசக்தி பக்தர்கள்.. அந்த நொடி இப்படியா ஆகணும்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் புகழ் பெற்றது. இந்த கோயிலுக்கு கார்த்திகை, மார்கழி மற்றும் தை ஆகிய மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து,விரதம் இருந்து வருவது வழக்கம். அந்த வகையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு ஆன்மிக பயணமாக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்தனர். அவர்கள் மகாபலிபுரம் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு அலையில் 3 பேர் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் 2 பேரை மட்டுமே மீட்க முடிந்தது..
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மகாபலிபுரம் தமிழ்நாட்டின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது.சென்னைக்கு மிக அருகில் உள்ள மகாபலிபுரம் கடற்கரையில் சிற்பங்கள், கோயில்களை காண வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு சிற்பக்கலையை ரசிக்கும் பயணிகள், மகாபலிபுரம் கடற்கரையில் குளிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

உண்மையில் மகாபலிபுரம் கடற்கரையில் குளிக்க தடை இருக்கிறது. ஆனால் தடையை யாரும் பொருட்படுத்துவது இல்லை.. மகாபலிபுரம் கடற்கரை சற்று வித்தியாசமானது. திடீரென கடுமையான அலைகள் வந்து ஆளையே தூக்கி சென்றுவிடும். இப்படி பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 46க்கும் மேற்பட்ட நபர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு 6 நபர்களும், 2022 ஆம் ஆண்டு 14 நபர்களும், 2023 ஆம் ஆண்டு 8 நபர்களும், 2024 ஆண்டு அதிகபட்சமாக 18 நபர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு கார்த்திகை, மார்கழி மற்றும் தை ஆகிய மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து வருவது வழக்கம் ஆகும். அப்படி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு ஆன்மிக பயணமாக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்தனர். அவர்கள் மகாபலிபுரம் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு 5 பேர் கடலில் குளித்தனர். இதில் அங்கு ஏற்பட்ட பெரிய அலையில் 3 பேர் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உயிர் காப்பாளராக நியமிக்கப்பட்ட மீனவர் ராஜ் என்பவர் மிதவை உதவியுடன் இரண்டு பேரை பத்திரமாக மீட்டார். ஆனால் நவீன் என்ற பக்தரை மட்டும் மீட்க முடியவில்லை.. அவரை கடல் அலை இழுத்துச் சென்றது. இது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தேடி வருகிறார்கள். ஆன்மீக பயணம் வந்த இடத்தில் உறவினை தொலைத்த பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி அங்கு இருக்கிறார்கள். இந்த காட்சி காண்போரை நெகிழ வைத்தது.
மகாபலிபுரம் கடற்கரை ஆபத்தான கடற்கரை என்பதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தடையை மீறி குளிக்கிறார்கள். அங்கு காவல் துறையினர் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் நிரந்தரமாக பைபர் படகு கடற்கரையில் அமைக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உள்ளூர் மக்கள் வைத்தனர்.












Click it and Unblock the Notifications