ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. டிடிவி தினகரன் போட்டியா? விழிக்கும் காங்கிரஸ், அதிமுக.. என்ன நடக்கும்?
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளரை களமிறக்கும் நிலையில் ஓபன்னீர் செல்வம் அணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தான் டிடிவி தினகரன் தானும் அங்கு போட்டியிட வாய்ப்புள்ளது என தெரிவித்தது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி அரசியல் களத்தை இன்னும் சூடாக்கி உள்ளது. ஒருவேளை டிடிவி தினகரன் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவாரா?, அவரது போட்டி திமுக, காங்கிரஸ், அதிமுக கட்சிக்கு எப்படி அமையும்? என்பது பற்றியும் அங்குள்ள களநிலவர தகவலும் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக அக்கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா இருந்தார். இந்நிலையில் தான் கடந்த 4ம் தேதி திருமகன் ஈவெரா காலமானார். தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இரட்டை இலை வேட்பாளருக்கே ஆதரவு.. ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து போட்டியிட வேண்டும்- ஜான் பாண்டியன்
இதில் திருமகன் ஈவெராவின் சகோதரர் அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அதிமுக வேட்பாளரை நிறுத்த உள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்துள்ள நிலையில் ஓ பன்னீர் செல்வமும் தனது தரப்பு சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் பேட்டி
இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை அதிமுக தீவிரமாக எதிர்க்க உள்ளது. போட்டியில் இருந்து விலகுவதாக பாமக அறிவித்துள்ளது. இருப்பினும் கூட சீமானின் நாம் தமிழர், இதுதவிர டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் வரும் 27 ம் தேர்தல் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளோம் என்றார்.
நானே போட்டியிடலாம் எனக்கூறிய டிடிவி
இந்த வேளையில் அவர் கூறிய ஒரு விஷயம் கவனிக்கத்தக்க வகையில் இருந்தது. அதாவது ‛‛ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா?'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டிடிவி தினகரன் சிறிதும் யோசிக்காமல், ‛‛நான் ஏற்கனவே சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். பெரியகுளத்தில் போட்டியிட்டுள்ளேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் என்றைக்கும் கவலைப்பட்டது இல்லை. நான் போட்டியிடுவதற்கும் வாய்ப்புள்ளது. நாங்கள் கஜினி முகமது போல் படையெடுத்து வெற்றியடையக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள். நிச்சயம் வெற்றி பெறுவோம்'' என பதில் அளித்தார்.
களநிலவரம் என்ன?
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா? அந்த தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு செல்வாக்கு உள்ளதா? என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான் அங்குள்ள களநிலவரம் என்ன? டிடிவி தினகரனுக்கு எப்படி இருக்கும் என்பது பற்றிய விபரம் வருமாறு:
கடந்த தேர்தலில் அமமுக செயல்பாடு
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதியாக உள்ளது. இந்த தொகுதி இதுவரை 3 சட்டசபை தேர்தலை சந்தித்துள்ளது. கடந்த 2011ல் அதிமுக கூட்டணியில் தேமுதிகவில் போட்டியிட்டு சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் அதிமுகவின் தென்னரசு வெற்றி பெற்றார். 2021ல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இதில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2021ல் போட்டியிட்டது. எஸ்ஏ முத்துகுமரன் என்பவர் அமமுக வேட்பாளராக போட்டியிட்டு வெறும் 1,204 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். நோட்டா பட்டம் 1,546 ஓட்டுக்கள் பெற்ற நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அதைவிடவும் குறைவாக பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் அமமுகவுடன் எஸ்டிபிஐ மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இருந்தாலும் வெறும் 1,204 ஓட்டுக்கள் மட்டுமே முத்து குமரனுக்கு கிடைத்தது.
டிடிவி தினகரன் போட்டியிட்டால் மாறும்
இந்த சூழலில் டிடிவி தினகரன் அங்கு போட்டியிட்டால் அவரால் கடந்த தேர்தலைவிடவும் கூடுதல் ஓட்டுக்கள் பெற முடியும். இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. டிடிவி தினகரன் தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களாலும் அறியப்பட்ட ஒரு அரசியல்வாதியாக இருப்பது முதல் காரணம். மேலும், எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் அணிகள் களமிறங்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் முடங்கலாம். அவ்வாறு நடந்தால் அவர்களுக்கு சுயேச்சை சின்னங்கள் வழங்கப்படும். இஇது டிடிவி தினகரனுக்கு சாதகமாக அமைவது மட்டுமின்றி இரட்டை இலை சின்னத்துக்கான ஓட்டுக்களை டிடிவி தினகரன் கவர வாய்ப்புள்ளது. இதுதவிர தற்போது திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதில் மக்கள் அதிருப்தியில் இருக்கும் பட்சத்தில் இரண்டு அணிகளாக பிளவுப்பட்ட அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்களை தீவிர பிரசாரத்தின் மூலம் டிடிவி தினகரன் அறுவடை செய்யலாம். இது அவருக்கு பிளஸ் பாயிண்டாக அமைகின்றன.
யாருக்கும் எளிதில் வெற்றி இல்லை
அதேசமயத்தில் டிடிவி தினகரனை திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாதாரணமாக எடை போட்டுவிடாது. ஏனென்றால் டிடிவி தினகரனை பொறுத்தமட்டில் சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் இன்றி 2017 ல் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவை எதிர்த்து போட்டியிட்டு குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்றார். இதற்கு முன்பும் தேனி மாவட்டம் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் 1999ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு டிடிவி தினகரன் வாகை சூடியுள்ளார்.கடந்த தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் களமிறங்கி தோல்வியடைந்தார். இதனால் டிடிவி தினகரன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவரது வெற்றி என்பது களப்பணியை பொறுத்து மட்டுமே அமையும். இருந்தாலும் கூட டிடிவி தினகரன் களமிறங்கினால் தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் இன்னும் சுவாரசியமாவதோடு அனைத்து கட்சி, அணிகளின் வேட்பாளர்களும் வெற்றிக்காக அதிகம் போராட வேண்டி இருக்கும் என்பதில் ஐயம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.