டேஞ்சர்.. விஜய் தலைக்கு மேல் கத்தி.. நம்பிக்கை வாக்கெடுப்பில் மாற்றி ஓட்டு போட்டால் என்ன ஆகும்?
சென்னை: விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு தரும் கட்சிகளான விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் போன்றவை திமுகவுடன் நெருக்கமாக இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவர்கள் மாற்றி வாக்களித்தால் என்ன நடக்கும்? விஜய் ஆட்சி கவிழுமா? அல்லது வேறு கட்சியின் ஆதரவு உடனடியாக கிடைக்குமா? மீண்டும் தேர்தல் வருமா?
சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்தாலும், ஆட்சியைப் பிடிப்பதற்கு தலைகீழாலத் தண்ணீர் குடித்தார் விஜய். ஒருவழியாக தவெகவுக்கு தற்போது 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. வரும் 13 ஆம் தேதிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் ஆளுநர். சட்டசபையில் வாக்கெடுப்பில், எம்.எல்.ஏக்கள் மாற்றி ஓட்டு போட்டால் என்ன ஆகும்?

ஆட்சி கவிழும் சூழல்
தற்போது தவெக-விற்கு 120 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. மெஜாரிட்டிக்குத் தேவை 118. ஒருவேளை திமுகவின் நட்பு வட்டத்திலுள்ள கட்சிகள் (உதாரணமாக 3-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள்) கடைசி நேரத்தில் பின்வாங்கினால் அல்லது எதிராக வாக்களித்தால், விஜய் அரசு பெரும்பான்மையை இழக்கும். அப்படி நடந்தால், முதலமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டியிருக்கும் அல்லது ஆளுநர் ஆட்சியைக் கலைக்க உத்தரவிடுவார்.
விஜய்க்கு போதுமான ஆதரவு வாக்குகள் கிடைக்காமல் ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கு, அதிமுகவில் ஒரு பிரிவினர் விஜய் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும் சூழல் ஏற்படலாம். அல்லது பாமக உடனடி ஆதரவைக் கொடுக்கலாம்.
ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை
நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான அரசு தோல்வியடைந்தால், ஆளுநர் மீண்டும் மிகப்பெரிய கட்சியான திமுக அல்லது அதிமுக-வை அழைத்து, அவர்களால் ஆட்சி அமைக்க முடியுமா என்று கேட்பார்.
யாராலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், தமிழகத்தில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் (Mid-term Election) நடத்த பரிந்துரைக்கப்படும்.
கட்சித் தாவல் தடைச் சட்டம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி, ஒரு கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் கட்சியின் கொறடா (Whip) இடும் உத்தரவை மீறி வாக்களித்தால், அவர்கள் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
விசிக அல்லது இடதுசாரி கட்சிகளின் 1 எம்.எல்.ஏ தவெக-விற்கு எதிராகவோ அல்லது நடுநிலை வகித்தோ வாக்களித்தால், அந்தந்த கட்சிகளின் தலைமை புகார் அளிக்கும் பட்சத்தில் சபாநாயகர் அவர்களைப் பதவியிலிருந்து நீக்க முடியும்.
ஒரு கட்சியின் ஒட்டுமொத்த எம்.எல்.ஏ-க்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் இணைந்து வேறொரு கட்சியுடன் இணைந்தால் மட்டுமே இந்தச் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியும்.
மாற்றி ஓட்டு போட்டால் என்ன நடக்கும்?
திமுகவுடன் கூட்டணியில் இருப்பதன் காரணமாக ஒரு கட்சி மாற்றி வாக்களித்தால், அது அந்தத் தொகுதியிலுள்ள மக்களிடையே பெரிய அதிருப்தியை உண்டாக்கும். குறிப்பாக, மாற்றத்தை விரும்பி விஜய்க்கு வாக்களித்த மக்கள், கூட்டணிக் கட்சிகளின் இந்தச் செயலைத் துரோகமாகக் கருத வாய்ப்புள்ளது. இது வரும் காலங்களில் அந்தக் கட்சிகளின் செல்வாக்கை வெகுவாகப் பாதிக்கும்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆதரவு கட்சிகள் மாற்றி ஓட்டளிப்பது என்பது தற்கொலை முயற்சிக்குச் சமம். ஏனெனில், அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை இழக்க நேரிடும் என்பதோடு, தமிழ்நாடு மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும். இதனால், பெரும்பாலும் திரைக்குப் பின்னால் பேரம் பேசினாலும், அவையில் வாக்களிக்கும் போது கட்சித் தலைமையின் முடிவை மீறுவது கடினம்.
காங்கிரஸ் தவிர, சிறிய பிற கட்சிகள்தான் ஆதரவு தருகின்றன என்பதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதை கூட தவிர்க்க வாய்ப்புள்ளது. ஆனால் மக்கள் மன்றத்தில் அந்த கட்சிகள் பெயர் கெட்டுவிடும் என்ற ஒரே காரணம்தான் விஜய் சர்க்காரை காப்பாற்றப்போகிறது என்கிறார்கள்.













Click it and Unblock the Notifications