டிராவை நோக்கி செல்கிறதா 4வது டெஸ்ட்? ஆஸி.யை வீழ்த்த இந்தியா போட்ட திட்டம்.. என்ன அது?
ஆஸி.-க்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபியின் கடைசி போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலிய அணி கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் சதத்தால் 480 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 289 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. குறிப்பாக ஜடேஜா 28 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேஎஸ் பரத் அதிரடியாக ஆடினார். ஆனால் மறுபக்கம் விராட் கோலி முதல் செஷனில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் நிதானம் காட்டினார். இதன் பலனாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை பூர்த்தி செய்தார்.

விராட் கோலி அதிரடி
இதனிடையே அதிரடியாக ஆடிய பரத் 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க, விராட் கோலி சதம் விளாசிய பின் அதிரடிக்கு மாறினார். அவருடன் அக்சர் படேலும் சேர்ந்து பவுண்டரியாக விளாச இந்திய அணி எளிதாக முன்னிலை பெற தொடங்கியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 500 ரன்களை கடந்துள்ள நிலையில், விராட் கோலியும் 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.

நாளையும் பேட்டிங்
4ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறும் பட்சத்தில், ஆட்டம் டிராவை நோக்கி செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் விரைந்து ரன்கள் சேர்ப்பதோடு, நாளை முதல் ஒரு மணி பேட்டிங்கையும் இந்திய அணியே ஆட வேண்டும்.

மைதானத்தில் வெடிப்புகள்
ஏனென்றால் 2 நாட்களாக பந்துவீசியுள்ள ஆஸ்திரேலிய அணி, நாளையும் பந்துவீச தொடங்கும் போது மன ரீதியாக பலவீனமடையும். அதேபோல் எப்போது டிக்ளேர் செய்யப்படும் என்ற திட்டம் அறியாமல் ஆஸ்திரேலிய அணியினர் களமிறங்குவார்கள். இன்றைய ஆட்டத்தில் மைதானத்தின் சில இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

வெற்றிபெற வாய்ப்பு?
நாளைய ஆட்டத்தில் அது அதிகரிக்கும் பட்சத்தில், அது இந்திய அணிக்கு சாதகமாக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் 5ம் நாள் ஆட்டத்தில் பிட்ச் எப்போதும் சுழற்பந்துவீச்சுக்கே சாதகமாக இருக்கும். அஸ்வின் மற்றும் ஜடேஜா தங்களின் மாயாஜாலத்தை நிகழ்த்தினால், இந்திய அணி வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications