ஓபிஎஸ் vs எடப்பாடி vs சசிகலா.. மும்முனை தாக்குதலால் குலுங்கிய "கோவை".. அதிகாலையிலேயே.. என்னாச்சு?
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் வெடித்துள்ள நிலையில் திடீரென ஓபிஎஸ் - எடப்பாடி- சசிகலா மூவரும் கொங்கு மண்டலத்திற்கு குறி வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியோ.. நான்தான் பொதுச்செயலாளர். விரைவில் அதற்கு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
எனக்கே அதிக நிர்வாகிகள் ஆதரவு உள்ளது என்று உறுதியாக இருக்கிறார். ஆனால் இன்னொரு பக்கம் சசிகலாவோ.. அப்போ நான் யாரு? நான்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதி ஆனவர் என்று கூறி வருகிறார்.

பதிலடி
இவர்கள் இருவருக்கும் இடையில்.. அட ஏங்க.. பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதா வகித்த பதவி. அதில் வேறு ஒருவர் அமர்வது சரியாக இருக்காது. இரட்டை தலைமையே இருக்கட்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பொதுக்குழுவை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.

சட்ட போராட்டம்
இந்த சட்ட போராட்டங்களுக்கு இடையில் போஸ்டர் யுத்தங்களும் நடந்து வருகின்றன. இந்த போஸ்டர் யுத்தத்தை முதலில் தொடங்கி வைத்தது என்னவோ ஓ பன்னீர்செல்வம்தான்.அவர்தான் பொதுக்குழுவிற்கு முன்னதாக தனக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டினார். அதிலும் எடப்பாடி பழனிசாமி வீடு இருக்கும் சேலம் நெடுஞ்சாலை பகுதியில் கூட ஓ பன்னீர்செல்வம் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இப்போதும் பொதுக்குழு நடக்க உள்ளதை முன்னிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

கோவை
இந்த முறை கொங்கு மாவட்டங்களை குறி வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. முக்கியமாக கோவையில் அதிக அளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. சென்னையில் போஸ்டர்கள் ஒட்ட கட்டுப்பாடு உள்ள காரணத்தால் கோவையில் அதிக அளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதிலும் இன்று அதிகாலையில் அதிமுக தொடர்பான போஸ்டர்கள் கோவையில் மிக அதிக அளவில் ஒட்டப்பட்டன.

அதிகாலையில் என்ன நடந்தது?
அதிகாலை 2 மணி அளவில் ஓபிஎஸ் தரப்பு சார்பாக கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர். எடப்பாடியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் படிவத்தில் கூட கையெழுத்து போடாமல் எடப்பாடி திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார். அம்மாவின் அரசியல் வாரிசு ஓ பன்னீர்செல்வம்தான் என்று பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

எடப்பாடி
இதற்கு பதிலடி தரும் வகையில்.. எடப்பாடி பக்கம்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். எம்ஜிஆர் பொதுக்குழுவிற்கே அதிக அதிகாரம் உள்ளது என்று கூறினார். இந்த எம்ஜிஆரின் கொள்கைக்கு எதிராக ஓபிஎஸ் செயல்படுகிறார். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று எடப்பாடியின் ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள். பல இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
Recommended Video

சசிகலா
இந்த நிலையில்தான் கோவையில் பல இடங்களில் சசிகலா சார்பாகவும் போஸ்டர் ஒட்டி உள்ளனர். எடப்பாடி, ஓபிஎஸ் இருவரையும் விமர்சனம் செய்து போஸ்டர்களை அவர்கள் ஒட்டி உள்ளனர். அதில் அதிமுகவை காப்பாற்ற கூடிய ஒரே தலைவர் சசிகலாதான். சின்னம்மாதான் அதிமுகவை காப்பாற்ற வேண்டும், என்று போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இந்த மும்முனை தாக்குதலால் கோவையில் பல்வேறு இடங்களில் அதிமுக போஸ்டர்களாக காணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications